ADDED : டிச 14, 2024 11:10 PM
ஹூப்பள்ளி: பவுர்ணமி மற்றும் அமாவாசையில், சவதத்தி எல்லம்மா ரேணுகா கோவிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக, சிறப்பு பஸ்கள் இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
பெலகாவி, சவதத்தி எல்லம்மா கோவிலுக்கு, மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஹூப்பள்ளியில் இருந்து, பெருமளவிலான பக்தர்கள் செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, பவுர்ணமி, அமாவாசை, ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இதற்கு முன்பு தீபாவளி நேரத்தில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்த பஸ்கள் 15, 17, 20, 24, 27ம் தேதிகளில் இயக்கப்படும்.
ஹூப்பள்ளியின் ஹோசூர் பஸ் நிலையத்தில் இருந்து, சிறப்பு பஸ் புறப்படும். இதற்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை கவனித்து, பஸ் சேவை விஸ்தரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.