ADDED : அக் 08, 2024 09:15 PM
புதுடில்லி:தலைநகர் டில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த கட்டட இடிபாடுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை அகற்றும் சிறப்பு இயக்கத்தை, மேயர் ஷெல்லி ஓபராய் நேற்று துவக்கி வைத்தார்.
சிறப்பு இயக்கத்தை துவக்கி வைத்த மேயர் ஷெல்லி ஓபராய் கூறியதாவது:
குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க மாநகராட்சி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கட்டட இடிபாடுகள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை அகற்றும் சிறப்பு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஜூனியர் இன்ஜினியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் தங்கள் வார்டுகளில் கட்டுமான மற்றும் கட்டட இடிபாடுகளை அகற்றி தினமும் அறிக்கை சமர்ப்பிப்பர்.
அதேபோல, துணை மற்றும் உதவி ஆணையர்கள் தங்கள் மண்டலங்களில் தினமும் ஆய்வு நடத்துவர்.
ஆண்டு தோறும் தலைநகர் டில்லியில் குளிர்காலத்தின்போது காற்று மாசு பெரும் பிரச்னையாக உருவெடுக்கிறது. இந்த மாசு அதிகரிக்க கட்டட கழிவுகளும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
டில்லி அரசு மற்றும் டில்லி மாநகராட்சி இணைந்து நகரின் மாசு அளவைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கழிவு மேலாண்மை அமைப்பை மேம்படுத்துவதே மாநகராட்சியின் முக்கிய இலக்கு. மாநகராட்சியின் 12 மண்டலங்களில் துணை மற்றும் உதவி ஆணையர்கள் தினமும் ஆய்வு செய்வதை உறுதிப்படுத்த சிறப்பு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.
டில்லி மாநகராட்சியில் 250 வார்டுகளுக்கும் சிறப்பு இயக்கத்தில் ஜூனியர் இன்ஜினியர், பராமரிப்பு அலுவலர் மற்றும் சுகாதார அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

