ஆந்திராவை அதிர வைக்கும் மதுபான ஊழல்: முன்னாள் முதல்வரை நெருங்கும் சிறப்பு புலனாய்வு குழு
ஆந்திராவை அதிர வைக்கும் மதுபான ஊழல்: முன்னாள் முதல்வரை நெருங்கும் சிறப்பு புலனாய்வு குழு
ADDED : மே 02, 2025 11:42 PM

ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், 3,200 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான ஊழல் நடந்ததாக, நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில், ஜெகன் மோகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் எந்த நேரத்திலும் நெருங்க வாய்ப்புள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2019 -- -24ல் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்.,கை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், மதுபான கொள்முதல், விற்பனையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
20 சதவீத கமிஷன்
இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடைபெறுகிறது. தமிழகத்தை போலவே, ஆந்திராவிலும் அதிக வருவாய் தரும் முக்கிய துறைகளில் மதுபானமும் ஒன்று.
அங்கு பி.சி.எல்., எனப்படும் 'மதுபான கார்ப்பரேஷன் லிமிடெட்' சார்பாக சில்லரை விற்பனை மதுக்கடைகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன.
ஆனால், 2019ல் ஜெகன் மோகன் முதல்வரானதும், அந்த நடைமுறையை நிறுத்தி விட்டு, தமிழகத்தில் 'டாஸ்மாக்' போலவே, 'பி.சி.எல்., நிறுவனமே நேரடியாக மதுக்கடைகளை நடத்தியது. அதை, கடந்த ஆண்டு சந்திரபாபு நாயுடு முதல்வரானதும் ரத்து செய்து விட்டார்.
ஜெகன் மோகனின் ஐந்தாண்டு ஆட்சியில், அவரது ஐ.டி.,விங் தனி ஆலோசகரான ராஜ் காசி ரெட்டி, ஒட்டு மொத்த மதுபான வர்த்தகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், 'பிரபலம் இல்லாத கம்பெனிகளில் மதுபானம் கொள்முதல் செய்ய, கட்சி மற்றும் அரசின் மேல்மட்டம் வரை 20 சதவீத கமிஷன் பெறப்பட்டது.
கடந்த '2019 அக்., முதல் 2024 மார்ச் வரை மாதந்தோறும் 60 கோடி ரூபாய் வரை இதுபோன்று கிடைத்தது. 'இறுதி பெறுநர்' எனப்படும் 'டாப் மேன்' வரை பணம் சென்றது' என தெரிவித்தார். மற்றொரு முக்கிய குற்றவாளி சாணக்யாவும் இதை உறுதி செய்தார்.
காசி ரெட்டி துவங்கி ஜெகன் மோகனுக்கு நெருக்கமான விஜய் சாய் ரெட்டி, மிதுன் ரெட்டி, ஜெகன் மோகனின் உறவினர் ஒய்.எஸ்.சுனில் ரெட்டி, ஜெகன் மோகனின் மனைவி பாரதிக்கு சொந்தமான, 'பாரதி சிமென்ட்' நிறுவன அதிகாரி கோவிந்தப்ப பாலாஜி ஆகியோர் வழியாக, 'டாப் மேன்' என்பவருக்கு பணம் சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஐந்தாண்டில் மொத்தம் 3,200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை அளித்துஉள்ளது.
அமலாக்கத்துறை
காசி ரெட்டி, சாணக்யா இருவரும் கைதாகியுள்ளனர். விஜய் சாய் ரெட்டி, இரண்டு முறை சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகினார்.
இந்த முறைகேடான பணம் அனைத்தும் போலி ஜி.எஸ்.டி., பில்கள் வாயிலாக பொருட்களை அனுப்புதல், துணி நிறுவனங்கள், தங்க காசுகள், ஹவாலா, போன்ற வழிகளில் ஹைதராபாத், மும்பை, டில்லி போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதால் அமலாக்கத் துறையும் களமிறங்குகிறது. 'டாப் மேன்' யார் என்ற கேள்வியை எழுப்பி, ஐந்து ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் அளவுக்கு மதுபான ஊழல் நடந்திருப்பதாக, ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கூறுகிறது.
டில்லி மதுபான கொள்கையில், 100 கோடி ரூபாய் ஊழலுக்கே டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் துவங்கி, தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா வரை சிறைக்கு சென்றதை சுட்டிக் காட்டி, ஜெகன் மோகன் தப்ப முடியாது எனவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, ஜெகன் மோகனுக்கு எதிராக அமலாக்கத்துறை, ஐ.டி., சி.பி.ஐ., என அனைத்து விசாரணை அமைப்புகளையும் களமிறக்கி அவரது ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியை அழித்து விட்டு, துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கைகோர்த்து ஆந்திராவில் வலுவாக காலுான்ற பா.ஜ., முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெகன் மோகனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழிப்பது முக்கியம் என்பதால், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் பா.ஜ.,வின் மறைமுக நடவடிக்கைகளை வரவேற்கிறார்.
- நமது சிறப்பு நிருபர் -