விமான கழிப்பறையில் சிக்கிய பயணி 'ஸ்பைஸ் ஜெட்' கட்டணம் வாபஸ்
விமான கழிப்பறையில் சிக்கிய பயணி 'ஸ்பைஸ் ஜெட்' கட்டணம் வாபஸ்
ADDED : ஜன 18, 2024 01:24 AM
மும்பை, 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தின் கழிப்பறை கதவு பழுதடைந்ததால், மும்பையில் இருந்து பெங்களூரு வரை கழிப்பறையில் அமர்ந்தபடி பயணித்த பயணியிடம் விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன், கட்டணத்தையும் திருப்பி தருவதாக தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, கர்நாடகாவின் பெங்களூருவுக்கு, 'ஸ்பைஸ் ஜெட்' விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில் பயணித்த நபர் ஒருவர், நடுவானில் விமான கழிப்பறையை பயன்படுத்தி உள்ளார்.
கதவை திறந்து வெளியே வர முயன்ற போது, கதவின் தாழ்பாள் பழுதடைந்து சிக்கிக் கொண்டது. இதனால் கழிப்பறையில் இருந்து அவரால் வெளியேற முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் கதவு திறக்கவில்லை.
பயணியின் அலறல் சத்தம் கேட்ட விமான பணியாளர்கள், கதவை திறக்க முயன்றனர். நீண்டநேரம் போராடியும், கதவை திறக்க முடியவில்லை.
இதையடுத்து, உள்ளே சிக்கிய பயணியின் அச்சத்தை போக்குவதற்காக கதவின் அடிபாகம் வழியாக துண்டு சீட்டு அனுப்பினர்.
அதில், 'சார், பயப்படாதீர்கள்; இன்னும் சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கிவிடும். அதுவரை, கழிப்பறையின் மூடிப்பகுதியை மூடிவிட்டு, அதன்மீது பாதுகாப்பாக அமரவும். விமானம் தரையிறங்கியதும், பொறியாளரின் உதவியுடன் கதவை திறக்கிறோம்' என, குறிப்பிட்டு இருந்தனர்.
விமானம் தரையிறங்கியதும், விமான பொறியாளர்களின் உதவியுடன், கழிப்பறையின் கதவு திறக்கப்பட்டு பயணி வெளியே வந்தார்.
அவரிடம், ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் மன்னிப்பு கோரியது. அவரது விமான டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பி அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விமான போக்கு வரத்து இயக்குனரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.