ADDED : பிப் 18, 2025 05:54 AM

துமகூரு, சிரா தாலுகாவில் சீபி எனும் பகுதியில் நரசிம்ம சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இதில், விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலில் தரிசனம் செய்வதற்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.
ஒரு காலத்தில் ஒரு வணிகர், மாட்டு வண்டியில் தானியங்களை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அப்போது, அவருக்கு பசி எடுத்துள்ளது. அதனால், அவர் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு, தானியங்களை சமைக்க துவங்கி உள்ளார். அப்போது, தானியங்கள் ரத்த நிறத்தில் உருமாறின. அதை சாப்பிட்ட அவரும், அவரது காளைகளும் மயக்கம் அடைந்து உள்ளன.
சிறிய கோவில்
அப்போது, வணிகர் கனவில், நரசிம்ம சுவாமி தோன்றி உள்ளார். 'இது எனது இடம்; இங்கு வந்து நீ அ-சுத்தப்படுத்தி விட்டாய்' என கூறி உள்ளார். 'இதற்கு பரிகாரமாக இங்கு ஒரு கோவிலை கட்டிவிட்டு செல்' என்றும் கூறி உள்ளார். இதை ஏற்ற வணிகர், அப்பகுதியில் ஒரு சிறிய கோவிலை கட்டினார். இந்த தகவலை, புகழ்பெற்ற ஆங்கில வரலாற்று ஆசிரியர் லுாயிஸ் ரைஸ், தன் நுாலில் குறிப்பிட்டு உள்ளார்.
இதன்பின், 18 ம் நுாற்றாண்டில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் அரசவையில் திவானாக இருந்த கிருஷ்ணப்பாவின் மகன்களான லட்சுமி நரசப்பா, புட்டண்ணா, நல்லப்பா ஆகிய மூவரும் சேர்ந்து கோவிலை பெரிதாக கட்டி உள்ளனர்.
இக்கோவிலை கட்டி முடிப்பதற்கு 10 ஆண்டுகள் ஆகி உள்ளன. கோவில் மிக நேர்த்தியான திராவிட கலையில் கட்டப்பட்டு உள்ளது. இன்றும் பழமை மாறாமல் காட்சி அளிக்கிறது.
மூன்றடுக்கு
கோவிலின் நுழைவுவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டுள்ளது. கோவிலை சுற்றிலும் பெரிய அளவிலான மதில் சுவர்கள் உள்ளன. மூலவர் நரசிம்மசுவாமி, ராமர், கிருஷ்ணர், விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு சிறிய அளவிலான சன்னிதிகள் உள்ளன.
சுவர்களில் ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களின் ஓவியங்களும், மைசூரு மாகாணத்தில் நடந்த அரசவை ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. இதில், திப்பு சுல்தான், ஹைதர் அலி, கிருஷ்ண ராஜ உடையார் போன்ற அரசர்களின் அரசவை காட்சிகளும் ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன.
இக்கோவில் காலை 8:30 மணி முதல் பகல் 12:30 மணி வரையிலும், மதியம் 3:30 மணி முதல் மாலை 6:15 மணி வரை திறந்து இருக்கும். நரசிம்மருக்கு அனுதினமும் காலை 9:00 மணிக்கு அபிஷேகம் நடக்கும்
. - நமது நிருபர் -

