காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: ஆயுதம் ஏந்திய 3 பேர் கைது
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு: ஆயுதம் ஏந்திய 3 பேர் கைது
ADDED : நவ 07, 2025 09:11 AM

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலை போலீசார் முறியடித்தனர். தல்கேட்டில் ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நம் ராணுவம், 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாக்., பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், பாக்., ராணுவ விமானப்படை தளங்களும் பெருமளவில் சேதமடைந்தன. இந்நிலையில், நம் ராணுவத்துக்கு பதிலடி கொடுக்க, லஷ்கர் - இ - தொய்பா மற்றும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜமாத் - இ - இஸ்லாமி, ஹிஜ்புல் முஜாஹிதீன் மற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரிகள் பங்கேற்ற உயர் மட்ட கூட்டம் கடந்த மாதம் நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த கூட்டத்தின் போது, இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை நடத்த வேண்டும் என, பயங்கரவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
இதன் காரணமாக லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தங்களது ஆதரவாளர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கி உள்ளனர். மேலும், போதை பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்கள் மூலம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதியை திரட்டவும் முடிவு எடுத்திருக்கின்றனர். வழக்கமாக குளிர்காலங்களில் எல்லையில் ஊடுருவல் சம்பவங்கள் குறையும். ஆனால், இந்த முறை தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்கில் ஊடுருவல்களை அதிகப்படுத்தவும் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனால், எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காஷ்மீரில் பெரிய பயங்கரவாத தாக்குதலை போலீசார் முறியடித்தனர். தல்கேட்டில் ஆயுதம் ஏந்திய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று நபர்கள் கூலிபோரா கன்யாரைச் சேர்ந்த ஷா முதாயிப் மற்றும் கம்ரான் ஹசன் ஷா மற்றும் உத்தரபிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த முகமது நதீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வழக்கமான வாகன சோதனைகளின் போது கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

