ADDED : பிப் 08, 2024 05:33 AM
பெங்களூரு: கர்நாடகாவில் ஹுக்கா பார்களுக்கு தடைவிதித்து, நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரம், குடும்ப நலத்துறை நேற்று வெளியிட உத்தரவில் கூறியதாவது:
ஹுக்கா பின் விளைவு குறித்து ஆய்வு செய்த சுகாதார வல்லுனர்கள், இதை தடை செய்யும்படி அரசுக்கு பரிந்துரை செய்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவும், மாநிலத்தில் தடை செய்வதாக கூறியிருந்தார். அதன்படி ஹுக்கா பார்களுக்கு தடை விதித்து, உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மாநிலம் முழுதும், ஹுக்கா பார்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாக்கு அல்லது நிகோடின் ஹுக்கா உற்பத்திகள் விற்பதற்கு, புகைப்பது, புகைக்கும்படி ஊக்கப்படுத்துவது, சேகரித்து வைக்க, இதை பற்றி விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹுக்கா போதைப்பொருள் என, உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஹுக்கா புகைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கை விளைவிக்கும். மிகவும் அபாயமானது. இதை மனதில் கொண்டு, ஹுக்கா பாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த உத்தரவை மீறினால், குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம், உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு சட்டம் உட்பட, பல்வேறு சட்டங்களின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹுக்கா பார்கள் மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. 18 வயது முதல், 28, 29 வயது வரையிலான இளைஞர்கள் ஹுக்காவுக்கு பலியாகின்றனர். தற்போது கோப்தா சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

