புனித யாத்திரை பக்தர்களுக்கு மானியம் வழங்கும் மாநில அரசு
புனித யாத்திரை பக்தர்களுக்கு மானியம் வழங்கும் மாநில அரசு
ADDED : டிச 20, 2024 05:28 AM
பெங்களூரு: கர்நாடக பக்தர்கள் நலனுக்காக, மாநில அரசு மானியம் வழங்கி, சிறப்பு சுற்றுலா சலுகையை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை:
மாநில அரசு, முதன் முறையாக, சிறப்பு சுற்றுலா பேக்கேஜ்களை அறிவித்துள்ளது. கர்நாடக பக்தர்கள் வசதிக்காக மானியம் அளிக்கவுள்ளது. புரி ஜெகன்னாத், துவாரகா, தென்னக திருத்தலங்களுக்கு செல்வோருக்கு, மானியம் வழங்கப்படும்.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை, திருவனந்தபுரத்துக்கு ஆறு நாட்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இதற்கு மொத்தம் 25,000 ரூபாய் செலவாகும். அரசு சார்பில் 15,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 10,000 ரூபாய் மட்டுமே பக்தர்கள் செலவழிக்க வேண்டும்.
துவாரகா நாகேஸ்வரா, சோமநாத், திரயம்பகேஸ்வரா உட்பட பல இடங்களுக்கு எட்டு நாட்கள் சுற்றுலா அழைத்து செல்லப்படுவர். இதற்கு 32,500 ரூபாய் கட்டணமாகும். இதில் அரசு 17,500 ரூபாய் மானியம் வழங்கும். 15,000 ரூபாயை பக்தர்கள் செலவிட வேண்டும்.
பயணத்தின் போது, தரமான உணவு வழங்கப்படும். இந்த பேக்கேஜில், உணவு, தங்கும் வசதி, உள்ளூர் போக்குவரத்து, தரிசன வசதிகள் அடக்கம். பக்தர்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, மருத்துவ வசதிகளும் செய்யப்படும். ரயிலில் டாக்டர்கள், நர்ஸ்கள் இருப்பர்.
தென்னக திருத்தலங்களுக்கு செல்லும் ரயில்கள், பெங்களூரின் விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம், பெலகாவி, ஹூப்பள்ளி, ஹாவேரி, தாவணகெரே, பீரூர், துமகூரில் இருந்து புறப்படும். சுற்றுலா முடிந்த பின், மீண்டும் அந்தந்த ரயில் நிலையங்களில் இறங்கலாம். 2025 ஜனவரி 25ம் தேதி ரயில்கள் புறப்படும்; ஜனவரி 30ம் தேதி திரும்பும்.
புரி ஜெகன்னாத், துவாரகா செல்லும் ரயில்கள், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா ரயில் நிலையம், துமகூரு, பெலகாவி, அரசிகெரே, பீரூரு, தாவணகெரே, ஹாவேரியில் இருந்து புறப்படும். இதே இடத்துக்கு திரும்பும்.
துவாரகா செல்லும் ரயில்கள், ஜனவரி 6ம் தேதி புறப்படும். ஜனவரி 13ம் தேதி திரும்பி வரும். புரி ஜெகன்னாத் தரிசனத்துக்கு புறப்படும் ரயில்கள், பிப்ரவரி 3ம் தேதி புறப்பட்டு, பிப்ரவரி 10ம் தேதி திரும்பும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.