அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.2,000 கோடி கடன் பெற அனுமதி
அரசு போக்குவரத்து கழகங்கள் ரூ.2,000 கோடி கடன் பெற அனுமதி
ADDED : ஜன 02, 2025 06:19 AM
பெங்களூரு: ஊழியர்களுக்கு பி.எப்., பணம் வழங்குவது, எரிபொருள் நிலுவை தொகை வழங்குவது என, பல்வேறு தேவைகளுக்கு, 2,000 கோடி ரூபாய் கடன் பெற, போக்குவரத்துக் கழகங்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:
'சக்தி' திட்டத்தால், போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டத்தை தவிர்க்க முடியவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தன. எரிபொருள் வினியோகித்தவர்களுக்கு நிலுவை தொகை, ஊழியர்களுக்கு படித்தொகை, விபத்து நிவாரணம் வழங்குவது என, மொத்தம் 6,330.25 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
போக்குவரத்துக்கழகங்களுக்கு வரும் டிக்கெட் வருவாயால், பாக்கித் தொகையை செலுத்த முடியவில்லை. போக்குவரத்துக்கழகங்களுக்கு வேறு எந்த வருவாயும் இல்லை. ஊழியர்களின் பி.எப்., தொகை செலுத்த 2,901.53 கோடி ரூபாய், எரிபொருள் பாக்கி 527.37 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக 3,428.90 கோடி ரூபாய் கடன் தேவை என கணக்கிடப்பட்டது.
இதுகுறித்து, அரசுக்கு வேண்டுகோளும் விடுக்கப்பட்டது. போக்குவரத்துக் கழகங்கள் 2,000 கோடி ரூபாய் கடன் பெற, மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடனுக்காக உத்தரவாதம் அளிப்பதுடன், வட்டியை அரசே செலுத்தும். அசலை, போக்குவரத்துக் கழகங்கள் செலுத்த வேண்டும் என, அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.