ADDED : ஜன 23, 2026 02:29 AM
பலோடபஜார்: சத்தீஸ்கரில் உருக்காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி ஆறு தொழிலாளர்கள் பலியாகினர். மேலும், ஐந்து பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
சத்தீஸ்கரில் பலோடபஜார் - பட்டாபாரா மாவட்டத்தின் பக்குலாஹி பகுதியில் 'ரியல் இஸ்பாட் அண்ட் பவர் லிமிடெட்' என்ற தனியார் உருக்காலை இயங்கி வருகிறது.
இங்கு, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியாற்றி வந்தனர். அப்போது, இத்தொழிற்சாலையின் கழிவுகள் வெளியேறும் பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
அப்போது, சூடான நிலையில் வெளியேறிய கழிவுகள் தொழிலாளர்கள் மீது சிதறியதில் தீக்காயம் ஏற்பட்டு ஆறு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.
மேலும் ஐந்து பேர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

