"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆய்வு நடத்தாமல் அனுமதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம்
"ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆய்வு நடத்தாமல் அனுமதிக்க முடியாது" - உச்சநீதிமன்றம்
ADDED : பிப் 14, 2024 01:39 PM

புதுடில்லி: ‛‛ ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது'' என ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் துாத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை, 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. ஆலை அமைந்துள்ள பகுதிகளில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தினர். கடந்த 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலை மீதான தடை உத்தரவை நீக்கி, மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (பிப்.,14) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
குற்றச்சாட்டு
அப்போது தமிழக அரசு தரப்பில், ‛‛ அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்றவில்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது'' என வாதிடப்பட்டது.
திட்டவட்டம்
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. ஆலையை மூடி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது.
அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா, வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம். இவ்வாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

