குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : செப் 23, 2024 11:30 AM

புதுடில்லி: குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை பார்த்த நபரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது தவறானது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
சென்னை அம்பத்துார் பகுதியை சேர்ந்த, 27 வயது வாலிபர், மொபைல் போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளார். அவர் மீது, தகவல் தொழில்நுட்பம், போக்சோ சட்டப் பிரிவுகளில், அம்பத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக வழக்கை விசாரித்த, சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், 'ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து, தனிப்பட்ட முறையில் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல. அவற்றை மற்றவர்களுக்கு அனுப்புவது தான் குற்றம்' என தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து, சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் தீர்ப்புக்கு எதிராக குழந்தைகள் உரிமைக்கான கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவை இன்று (செப்.,23) தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி ஜே.பி., பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம் தான்.
* குழந்தைகளின் ஆபாச படம் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதிக்க அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
* ஒரு நீதிபதி எவ்வாறு இப்படி கூற முடியும். இது கொடுமையானது' என தீர்ப்பளித்தனர்.
* குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றம் அல்ல என்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.