புயல், மழை, வெள்ளம்; துல்லியமாக கணிக்கும் செயற்கைக்கோள்!: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
புயல், மழை, வெள்ளம்; துல்லியமாக கணிக்கும் செயற்கைக்கோள்!: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
ADDED : பிப் 17, 2024 04:40 PM

ஆந்திரா: 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோள் புயல், மழை, வெள்ளத்தை துல்லியமாக கணிக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார். 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, 'இன்சாட் - 3டிஎஸ்' செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.
இதன் எடை, 2,274 கிலோ. இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட். ஏவுதளத்தில் ராக்கெட் தயாராக உள்ள நிலையில், அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. இறுதிகட்ட பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையில் உள்ள செங்காளம்மா கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: வானிலை ஆய்வுக்காக இன்சாட்-3டிஎஸ் என்ற வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் புவி அறிவியல் அமைச்சகத்திற்காக உருவாக்கப்பட்டது. இன்சாட் வரிசை செயற்கைக்கோள்களில் இது மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும். புயல், மழை, வெள்ளத்தை துல்லியாமாக கணிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.