கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்: டெண்டுல்கர்
கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்: டெண்டுல்கர்
ADDED : ஜூலை 23, 2026 10:13 PM

மும்பை: '' கடின உழைப்புக்கு அங்கீகாரம், நேர்மைக்கு ஊக்கம் மற்றும் தகுதிக்கு வெற்றி கிடைக்கும் வகையிலான ஒரு கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்,'' என்று பிரபல கிிரக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
டில்லியில் நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடந்து வரும் நிலையில், அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எனது தந்தை ஒரு பேராசிரியர் ஆக இருந்தார். அவர் பல இளம் மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். எனக்கு ஆரம்பத்தில் இருந்து, '' தோல்வி அடைவதில் தவறு இல்லை. ஆனால், ஏமாற்றுவது தவறு. ஒரு போதும் குறுக்கு வழியை தேர்வு செய்யாதே'' என்று பாடம் கற்றுக் கொடுத்துள்ளார்.
சமூகத்தில் முதிர்ந்த குடிமக்களாக, கலாசாரத்தை வடிவமைக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. உழைப்பை விட முடிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கும் ஒரு சமூகம் தகுதியின் அடிப்படையில் முன்னேறுவதை விட குறுக்கு வழியையே நாடும். தங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்காத போது மாணவர்கள் ஏமாற்றம் அடைவது இயல்பானது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இனி வரும் காலங்களில் அவர்களுக்கு அத்தகைய உணர்வு ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய இளம் இந்தியா கனவுகளாலும் ஆற்றலாலும் நிறைந்துள்ளது. அவர்களே நமது வெற்றியின் உந்துசக்தியாகத் திகழ்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர்கள், நண்பர்கள் உறவினர்கள் பள்ளிகள் மற்றும் நிர்வாகத்தினர் எனச் சமூகம் சார்ந்த அனைவரும் நமது இளைஞர்கள் தொடர்ந்து ஊக்கத்துடனும், ஆற்றல் உடனும் இருப்பதை உறுதி செய்வதில் பெரும் பொறுப்பும், பங்குகளையும் கொண்டு உள்ளோம்.
கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். நேர்மை ஊக்குவிக்கப்படும் மற்றும் தகுதிக்கு வெற்றி கிடைக்கும் வகையிலான ஒரு கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும். நமது குழந்தைகளின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பாதுகாக்கும் தீர்வுகளை நாம் அனைவரும் கண்டறிவோம் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
