குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் சுவர்ண விதான் சவுதாவில் ஆய்வு
குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் சுவர்ண விதான் சவுதாவில் ஆய்வு
ADDED : அக் 18, 2024 11:08 PM

பெலகாவி: சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், சட்டசபை சபாநாயகர் காதர், மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
பெங்களூரு விதான் சவுதாவில் வழக்கமாக ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்கும். குளிர்காலக் கூட்டத்தொடர் மட்டும், பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டு சட்டசபை குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முன்னேற்பாடுகள் செய்ய வேண்டி உள்ளது.
பாதுகாப்பு
இந்நிலையில், சட்டசபை சபாநாயகர் காதர், செயலர் விசாலாட்சி, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, செயலர் மஹாலட்சுமி, பெலகாவி கலெக்டர் முகமது ரோஷன், எஸ்.பி., பீமாசங்கர் குலேத் ஆகியோர், சுவர்ண விதான் சவுதாவில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி, பாதுகாப்பு உட்பட என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெவ்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த வாய்ப்பு இருப்பதால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கடந்த காலங்களில், எம்.இ.எஸ்., எனும் மராத்தி ஏகிகிரண் சமிதியினர் போராட்டம் நடத்தியபோது, கல்வீச்சு நடந்தது. இது போன்று நடக்காமல் எச்சரிக்கையாக இருக்கும்படி போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பின், சபாநாயகர் காதர் கூறியதாவது:
கடந்தாண்டை விட சிறப்பாக நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வட மாவட்ட பிரச்னைகளுக்கு கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பெலகாவி காங்கிரஸ் நுாற்றாண்டு மாநாடு மற்றும் கித்துார் சென்னம்மா விஜயோத்சவத்தை ஒட்டி, சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டிசம்பர் 9ல் துவக்கம்?
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறியதாவது:
டிசம்பர் 9ம் தேதி முதல் 20ம் தேதி வரை பெலகாவியில் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் நடத்தும் வாய்ப்பு உள்ளது. இன்னும் தேதி இறுதி செய்யப்படவில்லை.
உறுப்பினர்கள் அதிக அளவில் பங்கேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பெலகாவியில் எம்.எல்.ஏ.,க்கள் பவன் கட்டுவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

