சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபான்ஷு குழு நாளை பயணம்
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுபான்ஷு குழு நாளை பயணம்
ADDED : ஜூன் 09, 2025 01:00 AM

கேப் கேனவரல்: 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கன் 9' ராக்கெட் வாயிலாக நாளை புறப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி
'நாசா' எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் இணைந்து, 2025ல், ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது.
இதில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, ஹங்கேரி, போலந்து நாடுகளைச் சேர்ந்த நான்கு பேர் செல்கின்றனர். இக்குழு, அங்கு 14 நாட்கள் தங்கி ஆய்வு நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் வாயிலாக புறப்பட தயாராக இருந்தது.
எனினும், அத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இதே ராக்கெட் வாயிலாக நாளை இக்குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது இந்தியர்
இக்குழு, வரும் 11ம் தேதி இரவு 10:00 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றடையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது என்று, நாசா அறிவித்துள்ளது.
இதன் வாயிலாக, 41 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார்.
இதற்கு முன், 1984ல் ரஷ்யாவின் சோயுஸ் திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு பயணம் செய்தார்.