சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 19ல் புறப்படுகிறது சுபான்ஷூ சுக்லா குழு
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 19ல் புறப்படுகிறது சுபான்ஷூ சுக்லா குழு
UPDATED : ஜூன் 15, 2025 06:09 AM
ADDED : ஜூன் 15, 2025 12:28 AM

புதுடில்லி:இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழு, சர்வ தேச விண்வெளி நிலையத்திற்கு வரும், 19ம் தேதி புறப்பட்டு செல்லும் என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின், 'ஆக்சியம் ஸ்பேஸ்' எனும் தனியார் நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயண திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
கசிவு
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவன மான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து, இப்பணியை செய்து வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு மற்றும் போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆகியோர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று, 14 நாட்கள் தங்கி ஆய்வு செய்ய தயாராக இருந்தனர்.
இதற்காக, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, 'பால்கன் - 9' ராக்கெட் வாயிலாக, 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' விண்கலத்தை கடந்த 11ம் தேதி ஏவ திட்டமிடப்பட்டது.
அப்போது, ராக்கெட்டின் பூஸ்டர் நிலையின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டபோது, திரவ ஆக்சிஜன் கசிவு கண்டறியப்பட்டது.
இந்த கசிவை, சரி செய்ய, 'ஸ்பேஸ் எக்ஸ்' குழுவுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டதால், 'பால்கன் - 9' ராக்கெட் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இக்கசிவு சரிசெய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கோளாறு
இதுகுறித்து இஸ்ரோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'பால்கன் - 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு வெற்றிகரமாக சரிசெய்யப்பட்டது.
'இதைத்தொடர்ந்து, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்த ராக்கெட்டை, வரும் 19ம் தேதி ஏவ, 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது' என, குறிப்பிட்டுஉள்ளது.
முன்னதாக, இக்குழு கடந்த மாதம், 29ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில், அப்பயணம் கடந்த 8ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
எனினும், மோசமான வானிலை காரணமாக அத்திட்டமும் தள்ளிப்போனது.