ADDED : அக் 04, 2024 12:14 AM
பெங்களூரு: 'முடா' வழக்கில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா நேற்று விசாரணைக்கு ஆஜரானார். முதல்வருக்கு எதிராக 500க்கும் மேற்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
முதல்வர் சித்தராமையா, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகள் வாங்கி கொடுத்த புகாரில், லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்தது. முடா முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கூறி, சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா அமலாக்க துறையில் புகார் செய்தார். அந்த புகாரின்படி, சித்தராமையா மீது வழக்கு பதிவானது.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, ஸ்நேகமயி கிருஷ்ணாவுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதன்படி நேற்று காலை, பெங்களூரு சாந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது முடா முறைகேடு தொடர்பாக சில தகவல்களையும், 500க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் கொடுத்துள்ளார். அவரிடம் மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது.