ADDED : பிப் 06, 2024 11:05 PM
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி தரப்பில் மானிய விலையில் கார் வாங்கி தருவதாக கூறி, 60க்கும் அதிகமானோரை ஏமாற்றி, 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை பெங்களூரு சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, கடந்தாண்டு அக்டோபர் 31ம் தேதி, ஒரு இளம்பெண்ணுக்கு மர்ம நபர் போன் செய்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு மாநகராட்சி அலுவலகத்தில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஊழியர் பணி வாங்கி தருவதாக நம்ப வைத்துள்ளார். இதற்காக, ஆன்லைன் வாயிலாக, முன் பணமாக 8,000 ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால், வேலை வாங்கி தரவில்லை. பல முறை கேட்டும், பணமும் தரவில்லை.
அதன்பின்னரே, தன்னை மோசம் செய்ததை உணர்ந்து கொண்டார். இது குறித்து, வடக்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பெங்களூரு ஸ்ரீநகர் காளிதாசா லே - அவுட்டில் வசிக்கும் தீபக், 22, என்பவரை சமீபத்தில் கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில், வித்யாரண்யபுரா காவிரி லே - அவுட்டில் வசிக்கும் ஹர்ஷா, 21, என்ற கூட்டாளியையும் கைது செய்தனர்.
இது குறித்து, நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், மாநகராட்சி தரப்பில் மானிய விலையில் கார் வாங்கி தருவதாக கூறி, 60க்கும் அதிகமானோரை மோசடி செய்தது ஒப்புகொண்டனர். பணத்தை பெற்று, கார் வழங்காமல் ஏமாற்றியுள்ளனர்.
மேலும், விதவையர், 60 வயது கடந்த பெண்களை தொடர்பு கொண்டு, பென்ஷன் வாங்கி தருவதாக கூறி, பணம் பெற்று கொண்டு மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. 15 லட்சம் ரூபாய்க்கும் மேலாக பணம் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மோசடிக்குள்ளானவர்கள் யாரும் இதுவரை புகார் செய்யவில்லை. தொடர்ந்து விசாரிக்கப்படுகிறது. இருவரது மொபைல் போன்கள், 2,000 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கூறினார்.

