'டிஷ்யூ' பேப்பரில் சுச்சனா கையெழுத்து: தடயவியல் ஆய்வறிக்கையில் தகவல்
'டிஷ்யூ' பேப்பரில் சுச்சனா கையெழுத்து: தடயவியல் ஆய்வறிக்கையில் தகவல்
ADDED : ஜன 13, 2024 11:17 PM

'டிஷ்யூ' பேப்பரில் இருந்தது சுச்சனாவின் கையெழுத்து என, தடய அறிவியல் ஆய்வகத்தினர் அறிக்கை அளித்துள்ளனர்.
பெங்களூரில் பிரபல தனியார் நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் சுச்சனா சேத், 39. இவரது மகன் சின்மய் ரமணன், 4. கடந்த 7 ம் தேதி கோவாவில் உள்ள பிரபல ஹோட்டலில் வைத்து, மகனை, சுச்சனா கொலை செய்தார்.
உடலை சூட்கேசில் அடைத்து, வாடகை காரில் பெங்களூரு நோக்கி வந்தபோது, போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் கோவா கலங்கோட் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுச்சனா தங்கியிருந்த அறையில் இருந்து கிழிந்த நிலையில், 'டிஷ்யூ' பேப்பரை போலீசார் கைப்பற்றி இருந்தனர்.
அந்த பேப்பரில் 'ஐ லைனரை' வைத்து, ஏதோ எழுதப்பட்டு பின்னர் அழிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து சுச்சனாவிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்கவில்லை. இதனால் சுச்சனாவை ஒரு பேப்பரில் எழுத வைத்தும், 'டிஷ்யூ' பேப்பரையும், தடய அறிவியல் ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பினர்.
இதன் அறிக்கை நேற்று கிடைத்தது. அந்த அறிக்கையில் 'டிஷ்யூ' பேப்பரில் இருந்தது, சுச்சனா கையெழுத்து தான் என்றும், என்ன எழுதி இருந்தார் என்று சரியாக தெரியவில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் சுச்சனாவின் கணவர் வெங்கட்ரமணாவிடம் நேற்று, கலங்கோட் போலீசார் விசாரணை நடத்தினர். 'சுச்சனாவின் மனநிலை எப்படி இருந்தது. உங்களிடம் பேசும்போது, எப்படி நடந்து கொள்வார். சின்மய் உங்களுடன் பேசும்போது, அவரின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது உட்பட, பல தகவல்களை விசாரித்து பெற்றுக் கொண்டனர்.
“நீதிமன்ற உத்தரவு இருந்தும், சின்மயை பார்க்க, கடந்த ஐந்து வாரங்களாக, சுச்சனா என்னை அனுமதிக்கவில்லை. பெங்களூரு வரும்படி என்னிடம் கூறிவிட்டு, சின்மயுடன், கோவாவிற்கு சென்று, என்னை அலையவிட்டார்,” என, போலீசாரிடம், வெங்கட்ரமணா கூறியுள்ளார்.
சுச்சனாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, அவரது மொபைல் போனில் 6,000 புகைப்படங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான புகைப்படங்கள், வீடியோ சின்மய் உடையது. மகன் மீது பாசம் வைத்திருந்தவர், எதற்காக கொன்றார் என்பது இன்னும் விலகாத மர்மமாகவே உள்ளது
- நமது நிருபர் -.

