ஏர்போர்ட்டில் பொம்மையிடம் சுதாகர் கெஞ்சல் ஊடகத்தினரை பார்த்து தலைதெறிக்க ஓட்டம்
ஏர்போர்ட்டில் பொம்மையிடம் சுதாகர் கெஞ்சல் ஊடகத்தினரை பார்த்து தலைதெறிக்க ஓட்டம்
ADDED : மார் 12, 2024 03:26 AM

தேவனஹள்ளி: சிக்கபல்லாபூரில் போட்டியிட சீட் வழங்கும்படி, பெங்களூரு விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம், முன்னாள் அமைச்சர் சுதாகர் கெஞ்சினார். ஊடகத்தினரை பார்த்து அவர் ஓட்டம் பிடித்தார்.
ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணி அரசு மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, 2019ல், அப்போதைய சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுதாகர், பா.ஜ.,வில் இணைந்தார். இவர் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோர் ஆட்சியில், சுகாதார துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். விரக்தியில் இருந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்.
இதற்காக, கடந்த சில மாதங்களாகவே பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். தனக்கு சீட் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், பிரசாரத்தையும் துவக்கிவிட்டார்.
இதற்கிடையில், வேட்பாளர் தேர்வுக்காக, இறுதிகட்ட ஆலோசனைக்காக கர்நாடக மூத்த தலைவர்கள் நேற்று காலை விமானம் மூலம் புதுடில்லி செல்வதற்காக பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு வந்தனர். இதையறிந்த சுதாகர், அவசர அவசரமாக விமான நிலையத்துக்கு வந்தார்.
முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை வரவேற்று, சிக்கபல்லாப்பூர் தொகுதியில் போட்டியிட எப்படியாவது வாய்ப்பு பெற்று தரும்படி கெஞ்சினார். விமான நிலையத்தின் உள்ளேயும் சென்று வலியுறுத்தினார்.
இதை ஊடகத்தினர் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதை கவனித்த சுதாகர், ஒன்றும் தெரியாதது போன்று, நைசாக அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்.

