'சுகோய்' விமானம் விபத்து அசாமில் 2 விமானிகள் பலி
'சுகோய்' விமானம் விபத்து அசாமில் 2 விமானிகள் பலி
ADDED : மார் 07, 2026 01:32 AM

குவஹாத்தி: அசாமில், 'சுகோய் - 30 எம்.கே., 1' ரக போர் விமானம் பயிற்சியின் போது விபத்துக்கு உள்ளானதில், நம் விமானப்படையைச் சேர்ந்த இரு விமானிகள் உயிரிழந்தனர்.
வடகிழக்கு மாநிலமான அசாமின் ஜோர்ஹாட் பகுதியில் உள்ள நம் விமானப்படை தளத்தில் இருந்து, ஸ்குவர்டன் குழு தலைவர் அனுஜ், விமானப்படை லெப்டினன்ட் புர்வேஷ் துராக்கர் ஆகியோர் பயிற்சி மேற்கொள்ள, 'சுகோய் - 30 எம்.கே., 1' ரக போர் விமானத்தில் நேற்று முன்தினம் சென்றனர்.
கர்பி ஆங்லாங் மாவட்ட எல்லைக்குள் சென்றபோது, கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து விமானம் மாயமானது. தகவலறிந்த விமானப் படையினர், மீட்புக்குழுவினருடன் இணைந்து தேடுதல் பணியை துவங்கினர்.
அடர்ந்த வனப்பகுதி மற்றும் மலைப்பாங்கான பகுதி என்பதால் விமானத்தை தேடும் பணி சவாலாக இருந்தது.
இந்நிலையில் நேற்று, ஜோர்ஹாட்டில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ள கர்பி ஆங்லாங் மாவட்டத்தின் வனப்பகுதியில், போர் விமானம் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது. இரு விமானிகளும் உயிரிழந்தனர். இதை, நம் விமானப்படையும் உறுதிப்படுத்தியது.
நம் வான் பாதுகாப்பின் முதுகெலும்பாக திகழும் சுகோய் போர் விமானம், ரஷ்ய நிறுவனமான சுகோயிடம் உரிமம் பெற்று, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. நம் விமானப்படையிடம், 200க்கும் மேற்பட்ட சுகோய் போர் விமானங்கள் உள்ளன.

