
தங்கவயல் ஒரு இலக்கிய பூஞ்சோலை. இங்கு தமிழ்க் கூவிய குயில்கள் ஏராளம். இதில் சிந்தனை சிறகுடன் பாட்டு வடிக்கும் தங்க கூட்டின் சங்கத் தமிழ்ப் பறவையாக முதுமையிலும் இளமை குறையா தமிழ் ஆர்வத்தின் சொல்லோர் உழவராக தேன் சிந்தும் வார்த்தைகளை வழங்குபவர்.
வயது கடந்தும், இடம் பெயர்ந்தும், தாம் பிறந்த தங்கம் துாங்கும் சீமையின், மண்ணின் பெருமையை மறக்காமல், மூன்று புத்தகங்களை உருவாக்கியவர் பாவலர் ஞானானந்தம்.
சாம்பியன் ரீப்
தங்கவயல் சாம்பியன் ரீப் பகுதியில் பஞ்சாப் லைன் என்ற இடத்தில் மூங்கிலால் தயாரிக்கப்பட்ட தட்டி வீட்டில் வாழ்ந்த தங்கச் சுரங்க தொழிலாளி மதலை முத்து சிந்துராஜ் -- மதலேன் மரி -மகனாக 1945 செப்டம்பர் 16ல் பிறந்தார். தங்கவயல் துாய மரியன்னை பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., முடித்து, பெங்களூரு செயின்ட் ஜோசப் கல்லுாரியில் பி.ஏ., ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.
பெங்களூரில், மாநில தலைமை தபால் நிலையத்தில் ஆடிட்டர் பணியில் 1968ல் சேர்ந்தார்; பல பதவி உயர்வை பெற்றார். 33 ஆண்டுகள் பணி செய்து, 2001ல் ஓய்வு பெற்றார். பணி ஓய்வு பெற்ற பின், கண்ணில் 'கிளைக்கோமா' எனும் கண் அழுத்த நோய் ஏற்பட்டு பார்வையை இழந்தார். தன் பணி காலத்தில் தகுதி அடிப்படையில், தமிழர் பலர் தபால் துறையில் வேலை வாய்ப்பை பெற்று கொடுத்தார். பீஹார், டில்லி, நாக்பூர் என பல நகரங்களில் தபால் துறை தொழிலாளர் பிரச்னைகளில் தீர்வு காண வைத்தது இவருக்கு மறக்க முடியாதது என்கிறார்.
பில்லண்ணா கார்டன்
தமிழர்கள் நிறைந்த பில்லண்ணா கார்டனில் வசித்தார். அமலா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்தார். இவரின் மனைவி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதன் பின், தமிழகத்தின் குடியாத்தம் பகுதியில் உள்ள அன்பு ஆசிரமத்தில் பிள்ளைகளுடன் உள்ளார்.
கண் பார்வை இழந்தாலும், தங்கவயல் மீதுள்ள சமூக அக்கறை, தாம் பிறந்த மண் மீதான அன்பு, சிந்தனையை பயன் படுத்தி நண்பர்கள் உதவியுடன் மூன்று புத்தகங்களை கொண்டு வந்தார். இவருக்கு பலர் உதவினர். புத்தகங்கள் அனைத்தும் தங்கவயலை மையமாக கொண்டது.
'நெஞ்சில் நின்ற நினைவுகள்', 'வரலாறு படைப்போம்', 'பொன்வயலின் பொற்காலம்' என மூன்று முத்தான புத்தகங்கள் தான் அவை.
'நான் விண்ணை தொட எண்ணவில்லை. மண்ணை தொட்டேன். அது உங்களையும் தொட வேண்டும் என்றே என் எண்ணங்களை எழுத்தாக்கி உள்ளேன்' என நுாலில் கூறியுள்ளார்.