UPDATED : ஆக 27, 2023 12:40 AM
ADDED : ஆக 27, 2023 12:39 AM

வனப்பகுதி என்றாலே, பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். அதுவே கடல் தண்ணீரில் இருக்கும் மாங்குரோவ் காடுகள் எனப்படும் சதுப்பு நில காடுகளும், பார்ப்பவர்களின் மனதை கொள்ளையடிக்கும்.
இத்தகைய, மாங்குரோவ் காடுகள் கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம், ஹொன்னாவரின் ஷராவதியிலும் உள்ளது. சமீபத்திய பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இங்குள்ள பசுமையான சதுப்புநில மரங்களுக்கு இடையே உள்ள அழகிய மர நடைபாதையின் வழியாக நடந்து கொண்டே அழகான இயற்கையை ரசிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தரும். வேலைப்பளு, மன அழுத்தம் போன்ற நகர வாழ்க்கையால் அவதிப்பட்டு வருவோரின் மனதை அமைதிப்படுத்த சிறந்த இடம்.
![]() |
இந்த மாங்குரோவ் காடுகள், எப்போதும் பச்சை நிறத்தில் இருக்கும். அவை உப்பைத் தாங்கும் திறன் கொண்டவை.
இது நீரில் இருக்கும் உலோகங்களை வடிகட்ட உதவுகிறது. கடலோரப் பகுதிகளில் அரிப்பைத் தடுக்கிறது.
ஹொன்னாவர் நகரிலிருந்து, 3 கி.மீ., துாரத்தில், கடற்கரைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. நீங்கள் உங்கள் வாகனத்தை நிறுத்தியவுடன், 2 நிமிட நடைப்பயணம். உங்களை சதுப்பு நிலங்களுக்கு நடுவே உள்ள மர நடைபாதைக்கு அழைத்துச் செல்லும்.
சதுப்புநிலக் காடுகளின் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களைப் பற்றி பார்வையாளர்களுக்குக் கற்பிக்க ஆங்காங்கே தகவல் பலகைகள் உள்ளன.
மரத்தாலான நடைபாதை வழியாகச் சென்ற பிறகு, ஷராவதியின் பின்புற நீர், பசுமையுடன் கூடிய அழகான இயற்கைக் காட்சியைக் காணலாம். இதற்குப் பிறகு சிறிய சதுப்புநிலத் தீவை இணைக்கும் மரப்பாலம் உள்ளது. சதுப்பு நிலங்களுக்கு இடையே மரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அற்புதமான அனுபவத்தை பெற முடியும்.
உள்ளூர் மீனவ சமூகத்தின் தீவிர பங்கேற்புடன் இத்தகைய சதுப்புநில காடுகள் வளர்த்து பாதுகாக்கப்படுகிறது.
சதுப்பு நில காடுகள், கடலோர நீரில் வளரக்கூடியவை. இவற்றின் வேர்கள் அவற்றை மிதக்கும் காடுகளைப் போல காட்டுகின்றன. வெள்ளம், புயல், சுனாமி போன்ற பெரிய பேரழிவுகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் வெப்பமண்டலக் காடுகளை விட நான்கு மடங்கு அதிகமான கார்பனை வடிகட்ட முடியும்.
குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் சென்று ரசிப்பது சந்தோஷத்தை அளிக்கும். காலை அல்லது மாலை நேரத்தில் படகில் சென்று பார்க்கலாம். படகின் அளவுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

