சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் தொழிற்சாலைகளுக்கு சப்ளை
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் தொழிற்சாலைகளுக்கு சப்ளை
ADDED : டிச 10, 2024 07:14 AM
பெங்களூரு: பெங்களுரில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கும் நோக்கில், சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை, தொழிற் பகுதிகளுக்கு வினியோகிக்க, குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 27 கோடி ரூபாய் செலவில், திட்ட அறிக்கை தயாரித்து அரசிடம் தாக்கல் செய்துள்ளது.
பெங்களூரு குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:
கோடைக்காலம் ஆரம்பத்திலேயே பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படுகிறது. பெங்களூரு அதிவேகமாக வளர்வதால், வருங்காலத்தில் குடிநீர் தேவை அதிகரிக்கும். எனவே, தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்து, குடிநீர் வாரியம் திட்டமிடுகிறது.
திட்ட அறிக்கை
குடிநீரை தவிர மற்ற தேவைகளுக்கு, காவிரி நீர் பயன்படுத்துவதை குறைக்கும் நோக்கில், தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 27 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 100 கி.மீ., தொலைவில் உள்ள காவிரியில் இருந்து, பெங்களூருக்கு தினமும் 2,225 எம்.எல்.டி., தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் 80 சதவீதம் நீர், கழிவு நீராக மாறி வீடுகளில் இருந்து வெளியே வருகிறது. இந்த நீரை சுத்திகரித்தாலும், இதை முழுமையான அளவில் பயன்படுத்துவது இல்லை.
கட்டுமான பணிகள், பூங்காக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த நீரை பொது மக்கள் வாங்க முன் வரவில்லை. எனவே, கால்வாய்கள் வழியாக ஏரிகளில் நிரப்பப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை தொழிற் பகுதிகளுக்கு வினியோகிக்க திட்டமிட்டுள்ளோம். அரசின் அனுமதி கிடைத்ததும், திட்டம் செயல்படுத்தப்படும். குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படும். இதற்காக பீன்யாவின் குடிநீர் வாரிய அலுவலகம் முன், சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருக்கு தனி டேங்க் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து நீர் வினியோகிக்கப்படும்.
காவிரி குடிநீர்
பெரும்பாலான தொழிற்சாலைகளுக்கு, காவிரி குடிநீர் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக சில தொழிற்சாலைகளுக்கு இணைப்பு தரப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்க, தனி குழாய் பொருத்தப்படும். அரசின் அனுமதி கிடைத்தால், ஆறு முதல் எட்டு மாதங்களில் பணி முடியும்.
ஏற்கனவே, சில தொழிற்சாலைகளுக்கு பைப்லைன் மற்றும் டாங்கர் மூலமாக, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்தியன் ஏர் போர்ஸ், ரயில்வே வீல் பேக்டரி, ஐ.டி.சி., பெங்களூரு சர்வதேச விமான நிலையம் உட்பட, பல தொழிற்சாலைகள், லால்பாக், கப்பன் பூங்காக்களுக்கும், இந்த நீரை வினியோகிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.