இலவசங்களால் சோம்பேறியாகும் மக்கள் உச்ச நீதிமன்றம் வேதனை
இலவசங்களால் சோம்பேறியாகும் மக்கள் உச்ச நீதிமன்றம் வேதனை
ADDED : பிப் 13, 2025 01:46 AM
புதுடில்லி: 'தேர்தலில் அறிவிக்கப்படும் இலவசங்களால் மக்கள் வேலைக்கு செல்ல விரும் பாமல் சோம்பேறிகளாகிவிட்டனர்' என, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
நகரங்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு, தங்குமிட வசதியை ஏற்படுத்தி தரும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், 'தேர்தலில் அறிவிக்கப்படும் இலவசங்களால், எந்த வேலைக்கும் செல்லாமல் பணம் கிடைக்கிறது; ரேஷன் பொருட்களும் இலவசமாக கிடைக்கின்றன.
'வங்கி கணக்கில் நேரடியாக பணம் போடும் திட்டத்தால், வேலைக்கு செல்வதை விரும்பாமல், மக்கள் சோம்பேறிகளாகி விட்டனர். வீடற்ற மக்கள் மீது அக்கறை காட்டும் இந்த மனு பாராட்டத்தக்கது.
'ஆனால், அவர்களை சமூகத்தின் ஓர் அங்கமாகக் கொண்டு வந்து, நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பில் ஈடுபடுத்த வேண்டும்' என்றனர்.
மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வி.வெங்கடரமணி, ''வறுமை ஒழிப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், வீடற்ற மக்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன,'' என்றார்.
வறுமை ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த எவ்வளவு காலம் ஆகும் என மத்திய அரசிடம் கேட்டு தெரிவிக்கும்படி கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆறு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.