அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடிகள்: சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
அதிகரிக்கும் டிஜிட்டல் கைது மோசடிகள்: சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
ADDED : டிச 01, 2025 03:48 PM

புதுடில்லி: டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அதிகாரம் அளித்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர். இது தொடர்பாக, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு இன்று (டிச.,01) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* குடிமக்களை ஏமாற்ற மோசடி செய்பவர்களுடன் கைகோர்த்து செயல்படும் வங்கி அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க வேண்டும். குடிமக்களை ஏமாற்றப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்க சுதந்திரம் உள்ளது.
* சைபர் குற்றங்களை கையாள்வது குறித்து மத்திய உள்துறை, டிஓடி, நிதி உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களின் கருத்துக்களை கேட்க வேண்டும். இதுபோன்ற ஆன்லைன் டிஜிட்டல் கைது மோசடிகளை கையாள்வதற்கு மாநில சைபர் குற்ற தடுப்பு பிரிவின் மையங்களை அமைக்க வேண்டும்.
* சைபர் குற்றங்களில் பயன்படுத்தக்கூடிய பல சிம் கார்டுகளை, வேறு பயனருக்கு வழங்குவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
* எதிர்க்கட்சி ஆளும் மேற்கு வங்கம், தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் டிஜிட்டல் கைது வழக்குகளை விசாரிக்க சிபிஐ அனுமதி வழங்க வேண்டும்.
* சர்வதேச சைபர் குற்றவாளிகளை அணுக இன்டர்போலின் உதவியை சிபிஐ அணுக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
* சைபர் மோசடி வழக்குகளில் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதது ஏன்? என்று ரிசர்வ் வங்கிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து பதில் அளிக்க சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
* நாடு தழுவிய டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளை முதலில் விசாரிக்க சிபிஐக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

