சாவர்க்கர் பற்றி பொறுப்பற்ற பேச்சு: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
சாவர்க்கர் பற்றி பொறுப்பற்ற பேச்சு: ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
ADDED : ஏப் 26, 2025 12:42 AM

புதுடில்லி: சாவர்க்கர் பற்றி இழிவாக பேசிய வழக்கில், ராகுலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி இதுபோன்று தொடர்ந்து பேசினால், தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரிப்போம் என்றும் எச்சரித்தது.
காங்., முன்னாள் தலைவரான ராகுல், கடந்த 2022-ல் 'பாரத் ஜோடா யாத்திரை' சென்றபோது, மஹாராஷ்டிராவின் அகோலாவில் சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கரை, பிரிட்டிஷாரின் பணியாள் என்றும், அதற்காக பிரிட்டிஷாரிடம் இருந்து பென்ஷன் பெற்றார் என்றும் விமர்சித்தார்.
வழக்குப்பதிவு
இதையடுத்து, ராகுல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக் கோரி, உ.பி.,யை சேர்ந்த நிருபேந்திர பாண்டே என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்யவும், அவருக்கு சம்மன் அனுப்பவும் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல் முறையீடு செய்தார். அதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அமர்வு முன் நேற்று நடந்தது.
ராகுல் சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜரானார். அப்போது, ராகுலுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
நீதிபதிகள் கூறியதாவது:
அரசியல் கட்சியின் தலைவராக இருந்து கொண்டு, சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி பொறுப்பற்ற முறையில் பேசுவதா? சுதந்திர போராட்ட தலைவர்களை இழிவு படுத்துவதை அனுமதிக்க முடியாது.
பாராட்டி கடிதம்
பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு எழுதிய கடிதங்களில், மஹாத்மா காந்தி கூட, 'உங்கள் உண்மையுள்ள பணியாளர்' என குறிப்பிட்டிருக்கிறார்.
அதற்காக, காந்தியை பிரிட்டிஷாரின் வேலைக்காரர் என ராகுல் கூறுவாரா? நம்மால் ஏற்க முடியுமா? ராகுலின் பாட்டி இந்திரா பிரதமராக இருந்தபோது, சாவர்க்கரை பாராட்டி கடிதம் எழுதினார் என்பதாவது, ராகுலுக்கு தெரியுமா?
மஹாராஷ்டிராவில் சாவர்க்கரை வணங்குகின்றனர். வரலாற்றை தெரிந்து கொள்ளாமல், இதுபோன்று இனிமேல் பேசக் கூடாது.
அப்படி இழிவு படுத்தி தொடர்ந்து பேசினால், உச்ச நீதிமன்றமே ராகுலுக்கு எதிராக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கும்.
இந்த வழக்கில் ராகுலுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய மறுத்த அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

