'உயர் அதிகாரிகள் கண்டிப்பதை குற்றமாக கருத முடியாது': உச்ச நீதிமன்றம்
'உயர் அதிகாரிகள் கண்டிப்பதை குற்றமாக கருத முடியாது': உச்ச நீதிமன்றம்
ADDED : பிப் 16, 2025 11:22 PM

புதுடில்லி: 'பணி இடங்களில் உயர் அதிகாரிகளின் கண்டிப்பு, கிரிமினல் குற்றமல்ல' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
தேசிய அறிவுசார் குறைபாடு உடையோரின் மேம்பாட்டுக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மீது, பெண் உதவி பேராசிரியை ஒருவர், 2022ல் வழக்கு தொடர்ந்தார்.
தன்னை, உயரதிகாரிகள் உள்நோக்கத்துடன் அவமதிப்பதாகவும், திட்டியதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், இயக்குநர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:
பணி இடங்களில் மூத்தவர்கள் கண்டிப்பதை உள்நோக்கத்துடன் அவமதிப்பதாக கருத முடியாது; அது கிரிமினல் குற்றமல்ல. இது போன்ற குற்றச்சாட்டுகளை அனுமதித்தால், பணி இடங்களின் அமைதியான சூழலானது, ஒட்டுமொத்தமாக சீரழிந்து விடும்.
சீனியர்களின் அறிவுரையானது, பணி இடத்தில் ஒழுக்கம், கடமைகளை செய்வது ஆகியவற்றுடன் தொடர்புடையது. தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள், கடமையை பொறுப்புடன் செய்ய வேண்டும் என்பது, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. இந்த வழக்கு வெறும் யூகத்தின் அடிப்படையில் தொடரப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவு 504, தற்போது புதிய 'பாரதிய நியாய சன்ஹிதா' சட்டத்தின் 352வது பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி உள்நோக்கத்துடன் ஒருவரை அவமதிப்பது குற்றம்; அதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

