அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி மீது நடவடிக்கை? விளக்கம் கேட்டது சுப்ரீம் கோர்ட்
அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி மீது நடவடிக்கை? விளக்கம் கேட்டது சுப்ரீம் கோர்ட்
UPDATED : டிச 11, 2024 02:36 PM
ADDED : டிச 11, 2024 02:38 AM

புதுடில்லி : விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில், வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்று பேசியதாவது:
பெரும்பான்மையினராக உள்ள ஹிந்துக்களின் விருப்பப்படியே இந்த நாடு செயல்படும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், குழந்தைகளின் கண் எதிரே விலங்குகள் கொல்லப்படுகின்றன. இதை பார்த்து அந்த குழந்தைகள் வளர்கின்றனர்.
இந்த சூழ்நிலையில், அந்த குழந்தைகள் எப்படி கனிவாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பர்? அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் இல்லை என்றாலும், சிலர் ஆபத்தானவர்கள்.
இவ்வாறு நீதிபதி பேசினார்.
சர்ச்சை
நீதிபதி சேகர் குமார் யாதவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூ., மூத்த தலைவர் பிருந்தா காரத், சி.ஜே.ஏ.ஆர்., எனப்படும், நீதித்துறை பொறுப்பு மற்றும் சீர்திருத்தங்களுக்கான இயக்கத்தினர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதினர்.
சி.ஜே.ஏ.ஆர்., எழுதிய கடிதத்தில், 'நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரிடம் உள்ள அனைத்து வழக்குகளின் விசாரணைகளை திரும்ப பெற வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிருந்தா காரத் எழுதிய கடிதத்தில், 'இதுபோன்ற செயல்கள் ஒட்டுமொத்த நீதித் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றன. நீதித்துறையில் இத்தகைய சார்புநிலையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு இடமில்லை.
'ஒரு நீதிபதி சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பாரபட்சமான கருத்துகளைக் கொண்டிருக்கும் நீதிமன்றத்தில், எந்த வழக்கறிஞரும் நீதியை எதிர்பார்க்க முடியாது' என, தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தை, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவரும், ஹைதராபாத் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான அசாதுதீன் ஓவைசி, லோக்சபாவில் நேற்று எழுப்பினார். மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவை பதவியில் இருந்து நீக்கக் கோரி கையெழுத்திட்டு அவர் நோட்டீஸ் அளித்தார்.
பரிசீலனை
இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்ட செய்தி:
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசியது, பத்திரிகைகள் வாயிலாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
நீதிபதி யாதவ் நிகழ்ச்சியில் பேசிய விபரங்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்திடம் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.