விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை: டாக்டர்களின் அஜாக்கிரதையால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை: டாக்டர்களின் அஜாக்கிரதையால் சிறுமிக்கு நேர்ந்த துயரம்
ADDED : மே 16, 2024 04:01 PM

கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோட்டில், டாக்டர்களின் கவனமின்மையால், கைவிரலில் அறுவை சிகிச்சைக்கு சென்ற 4 வயது சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
கையில் 6 விரல்கள் உள்ளதால் மருத்துவமனைக்கு அந்த சிறுமியை பெற்றோர்கள் அழைத்து வந்துள்ளனர். அச்சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளனர். அதற்கு பெற்றோர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதற்கு சிறுமியை அறைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை முடிந்து சிறுமி திரும்பிய போது, பெற்றோருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், கைக்கு பதில், வாயில் பிளாஸ்திரி மூலம் ஒட்டப்பட்டு இருந்தது. சிறுமியை பரிசோதித்த போது, கையில் 6வது விரலும் இருந்துள்ளது.
இது குறித்து, அறுவை சிகிச்சையின் போது உடன் இருந்த நர்சிடம் பெற்றோர்கள் கேட்டனர். அதை கேட்டு அந்த நர்ஸ் சிரித்தார்.பிறகு, நாக்கில் பிரச்னை இருந்ததால் அதனை சரி செய்தோம் என்று எங்களிடம் கூறினர். இதன் பிறகு வந்த டாக்டர் நடந்த தவறுக்கு எங்களிடம் மன்னிப்பு கேட்டார். 6வது விரலை அகற்றுவதாக கூறி சிறுமியை மீண்டும் அழைத்து சென்றார். இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து தகவல் வெளியில் தெரியவரவே, இச்சம்பவம் குறித்து, விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
ஏற்கனவே, 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு இதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த போது வயிற்றில் கத்திரியை வைத்து தைத்து விட்டதாக அந்த பெண் புகார் கூறியிருந்த நிலையில், தற்போது தவறாக மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, அங்கு வரும் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.