'தக் லைப்' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடலாம்; பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு கோர்ட் உத்தரவு
'தக் லைப்' திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடலாம்; பாதுகாப்பு வழங்க மாநில அரசுக்கு கோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 20, 2025 12:51 AM
கர்நாடகாவில், தக் லைப் திரைப்படத்தை வெளியிடலாம் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், திரை அரங்கங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது.
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த தக் லைப் திரைப்படம் கடந்த, 5ம் தேதி உலகம் முழுதும் வெளியானது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், 'தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்' என, கமல் பேசியது சர்ச்சையானது. 'கர்நாடகத்தில் திரைப்படத்தை வெளியிடக்கூடாது' என, கன்னட அமைப்புகள் போர்க்கொடி துாக்கின.
'மன்னிப்பு கேட்டால் படத்தை வெளியிடுவோம்' என, கன்னட அமைப்புகளும், அம்மாநில திரைப்பட வர்த்தக சபையும் தெரிவித்தன. கமல் மன்னிப்பு கேட்க மறுத்தார்.
விவகாரம் உயர் நீதிமன்றம் சென்றது. 'ஒரே ஒரு மன்னிப்பு, பிரச்னையை தீர்த்துவிடும்' என, நீதிபதி நாக பிரசன்னாவும் கருத்து தெரிவித்தார்.
அரசின் முடிவு
மன்னிப்பு கேட்க மாட்டேன் என, கமல் உறுதியாக இருந்தார். இதையடுத்து, தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடவும், திரை அரங்கங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும், தயாரிப்பு நிறுவனம் மற்றும் மகேஷ் ரெட்டி என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.
நேற்று நடந்த விசாரணையின் போது பட தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், கர்நாடகாவில் திரைப்படம் வெளியானால் பாதுகாப்பு வழங்கப்படும் என மாநில அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.
'அப்படியானால் வழக்கை முடித்துவிடலாமா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ''இது வெறும் திரைப்படம் சார்ந்த பிரச்னை மட்டும் அல்ல. தொடர்ச்சியாக திரைப்படங்கள் வெளியாகும்போதெல்லாம் இப்படி சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதும் வன்முறையில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடக்கின்றன.
''இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. கர்நாடகாவில் தக் லைப் படம் வெளியாகாததால் எங்களுக்கு, 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
''இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர முடிவு காண உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்,'' என, வழக்கறிஞர் சதீஷ் பராசரன் கோரிக்கை வைத்தார்.
அப்போது கர்நாடக அரசு தரப்பு முன்வைத்த வாதங்களில், 'இந்த விவகாரத்தில் பட தயாரிப்பாளர் தரப்பு தான் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என கூறினர்.
'திரைப்படத்தை வெளியிட அவர்கள் முடிவு செய்தால் பாதுகாப்பு வழங்க தயாராக இருக்கிறோம்' என, தெரிவிக்கப்பட்டது.
அனுமதி
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தணிக்கை சான்றிதழ் பெற்ற ஒரு திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமை.
திரையரங்குகளை தீக்கிரையாக்குவோம்; படத்தை வெளியிட மாட்டோம் என்று மிரட்டினால் அதை அடக்க வேண்டியது மாநில அரசு தான்.
நகைச்சுவை மேடை பேச்சாளர் ஏதேனும் பேசினால் கூட உணர்வுகள் புண்படுகிறது என சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலைமை தொடர்ந்தால் ஒரு கவிதைக்கு எதிராகவோ, நாடகத்திற்கு எதிராகவோ கூட வரும் காலங்களில் இப்படியான வன்முறை தொடரும். அதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது கன்னட அமைப்பினர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் நுாலி, ''காவிரி நதி நீர் விவகாரத்தில், தமிழகம் - கர்நாடகா இடையே பிரச்னை உள்ளது. அப்படி இருக்கையில் நடிகர் கமல்ஹாசன் பேசியது சரியானது அல்ல. அவர் மன்னிப்பு கேட்டால் மட்டுமே திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதனால் கோபமடைந்த நீதிபதிகள், 'இந்த இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை.
'அவர் கருத்து பிடிக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். அதுதான் சட்டப்படியான விஷயம்.
'நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நடக்கும் வன்முறைகளை ஆதரிக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது' என்றனர்.
இருதரப்பு வாதங்களும் முடிந்த பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'தக் லைப் திரைப்படத்தை வெளியிடுவதற்கு கர்நாடக அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் கர்நாடகா அரசு கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்' என, உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
-டில்லி சிறப்பு நிருபர்-