ADDED : நவ 16, 2025 11:13 PM

புதுடில்லி: 'யுனிசெப்' எனப்படும் ஐ.நா., குழந்தைகள் நல அமைப்பின் இந்தியாவுக்கான துாதராக, பிரபல தமிழ் நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
'யு னிசெப்' எனப்படும், ஐ.நா.,வின் குழந்தைகள் நல நிதியம், உலகின், 190 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது.
மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது.
இதன் இந்திய பிரிவில், அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்கள் ஏற்கனவே துாதர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வரிசையில், யுனிசெப் இந்தியா அமைப்பின் துாதராக, தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ''குழந்தைகள் தான் நம் மிகப்பெரிய பொறுப்பு; எதிர்கால நம்பிக்கை. யுனிசெப் துாதராக இணைவதில் பெருமிதம் கொள்கிறேன்.
''ஆரோக்கியமாக வளரவும், கற்றுக் கொள்ளவும், கனவு காணவும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுண்டு. இதை நனவாக்கவே, யுனிசெப் உழைத்து வருகிறது. இந்தப் பணியில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார்.

