சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு தமிழக உள்துறை செயலர் ஆஜராகி விளக்கம்
சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு தமிழக உள்துறை செயலர் ஆஜராகி விளக்கம்
ADDED : ஜன 31, 2025 10:28 PM
புதுடில்லி:சிலை கடத்தல் கோப்புகள், எப்.ஐ.ஆர்.,கள் மாயமான விவகாரத்தில் தமிழக உள்துறை செயலர், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
யானை ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழகத்தில், 300 கோடி ரூபாய் மதிப்பிலான 41 சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இந்த ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
இறுதி அறிக்கை
'கோப்புகள் மாயமான விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான திருடப்பட்ட கோப்புகளை உடனடியாக மீட்டு இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை தமிழக அரசு சரிவர பின்பற்றவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் யானை ராஜேந்திரன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா தலைமையிலான அமர்வு முன், கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்தது.
'இந்த விவகாரத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.
இவ்வளவு முக்கியமான ஒரு விவகாரத்தை தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி விசாரிக்க வில்லை' என கருத்து கூறிய நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறை செயலர் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்புவதாக தெரிவித்தனர்.
முயற்சி செய்கிறோம்
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறை செயலர் தீரஜ் குமார், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதன்பின், தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுவில் குறிப்பிட்டது போல 41 எப்.ஐ.ஆர்.,கள் காணாமல் போகவில்லை; 11 எப்.ஐ.ஆர்.,கள் மட்டும் தான் மாயமாகி உள்ளன. அவற்றில் இருக்கும் விஷயங்களையும் மீண்டும் தயார் செய்து விட்டோம்' என, தெரிவித்தார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'இந்த விஷயத்தில் தமிழக அரசு செய்த தவறை சரி செய்வதற்காக தான் நாங்கள் முயற்சி செய்கிறோம்.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலர் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புதிய நடவடிக்கைகள் தொடர்பான விஷயங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.