பிரிட்டன் - இந்தியா சட்ட கூட்டாண்மையின் ஆலோசகர்களாக தமிழக வக்கீல்கள் நியமனம்
பிரிட்டன் - இந்தியா சட்ட கூட்டாண்மையின் ஆலோசகர்களாக தமிழக வக்கீல்கள் நியமனம்
ADDED : செப் 20, 2025 02:39 AM

புதுடில்லி: பிரிட்டன் - இந்தியா சட்ட கூட்டாண்மையில் புதிதாக துவங்கப்படும் ஜி.சி.சி., பிரிவின் ஆலோசனை குழுவில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் அப்துல் சலீம் மற்றும் இளம்பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யு.கே.ஐ.எல்.பி., எனப்படும், பிரிட்டன் - இந்தியா சட்ட கூட்டாண்மை என்பது, வேகமாக வளர்ந்து வரும் மூத்த வழக்கறிஞர்களின் வலையமைப்பு.
வணிகச் சட்டம் இதில், ஐரோப்பிய நாடான பிரிட்டன், இந்தியா மற்றும் வளைகுடா நாடுகளை சேர்ந்த முன்னணி வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
சட்ட விவகாரங்களில், சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ளுதல், சட்ட மற்றும் வணிக சமூகங்களில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த அமைப்பின் நோக்கம்.
கடந்தாண்டு நிறுவப்பட்ட இந்த அமைப்பில், புதிய பிரிவாக ஜி.சி.சி., எனப்படும், வளைகுடா கூட்டுறவு கவுன்சில் துவங்கப்படவுள்ளது. இதன் அறிமுக விழா, வரும் நவம்பரில் துபாயில் நடக்கவிருக்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் சர்வதேச நிதி மைய நீதிமன்றங்களின் தலைமை நீதிபதி வெய்ன் மார்ட்டினின் வழிகாட்டுதலின் கீழ் ஜி.சி.சி., பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் அப்துல் சலீம் மற்றும் இளம்பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 1995 முதல் வழக்கறிஞராக உள்ள அப்துல் சலீம், 2023, ஜன., முதல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உள்ளார். அரசியலமைப்பு, நிர்வாகம், சிவில், குற்றவியல் மற்றும் வணிகச் சட்டம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராகவும், அனைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் வழக்கறிஞராகவும் அப்துல் சலீம் பணியாற்றி உள்ளார்.
பல்வேறு வழக்குகள் தமிழகத்தில், 'ஸ்டெர்லைட்' ஆலை மூடல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இவர் வாதிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இளம்பாரதி, 'தினமலர்' நாளிதழ், 'தி டைம்ஸ் ஆப் இந்தியா' குழுமம், 'தி ஆசிரமம்', ஹெச்.டி.எப்.சி., வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் வழக்கறிஞராக உள்ளார்.