சொகுசு ஹோட்டல்களில் தங்கி நுாதன மோசடி தமிழக நபர் கைது
சொகுசு ஹோட்டல்களில் தங்கி நுாதன மோசடி தமிழக நபர் கைது
ADDED : டிச 11, 2024 11:53 PM

உடுப்பி :  டில்லி, மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களின் சொகுசு ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கி, கட்டணம் செலுத்தாமல் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தின் துாத்துக்குடியைச் சேர்ந்தவர் பிஸ்மென்ட் ஜான், 67. இவர் டிசம்பர் 7ம் தேதி, உடுப்பி, மணிப்பாலின் பிரபலமான சொகுசு ஹோட்டலில் தங்குவதற்கு அறை கேட்டார். 9ம் தேதி முன்பணம் செலுத்துவதாக கூறினார்.
பின், 12ம் தேதி அறையை காலி செய்யும்போது, பில் தொகையை முழுமையாக செலுத்துவதாக, மேலாளரை நம்பவைத்தார். ஹோட்டலிலேயே உணவு, சிற்றுண்டி சாப்பிட்டார். பில்லுடன் சேர்த்து கட்டுவதாக கூறினார். மொத்தம் 39,298 ரூபாய் பில் தொகை செலுத்த வேண்டியிருந்தது.
இரண்டு நாட்கள் தங்கியிருந்த அவர், பில் தொகை செலுத்தாமல் மாயமானார். இதுதொடர்பாக மணிப்பால் போலீஸ் நிலையத்தில், ஹோட்டல் மேலாளர் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார், பிஸ்மென்ட் ஜானை கைது செய்தனர்.
இதுகுறித்து, உடுப்பி மாவட்ட எஸ்.பி., அருண்குமார் அளித்த பேட்டி:
ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்கி, பில் செலுத்தாமல் தப்பியதாக மணிப்பால் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. மணிப்பால் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி பிஸ்மென்ட் ஜானை கைது செய்தனர்.
பட்டதாரியான இவர் டில்லி, மஹாராஷ்டிரா, கேரளா உட்பட பல மாநிலங்களின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி செய்துள்ளார். இங்கெல்லாம் அறை எடுத்துத் தங்குவார். பல ஆயிரக்கணக்கான ரூபாய் பில் செலுத்தாமல் தப்பிச் செல்வது, விசாரணையில் தெரிய வந்தது.
நாட்டின் பல போலீஸ் நிலையங்களில், 49 வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது மணிப்பால் போலீசார், இவரை கைது செய்தனர். உடுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம், அவரை 14 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

