ADDED : அக் 21, 2024 12:13 AM

சாம்ராஜ்நகர் : கர்நாடக வனத்துறை மலை மஹாதேஸ்வரா மலையில் சபாரி அறிமுகம் செய்துள்ளது. இது, தமிழக சுற்றுலா பயணியரை பெருமளவில் ஈர்க்கிறது.
சாம்ராஜ் நகர், ஹனுாரின் பிலிகிரி ரங்கசுவாமி கோவிலின், புலிகள் சரணாலயம் பகுதியை ஒட்டி, மலை மஹாதேஸ்வரா மலையின் வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இந்த வனப்பகுதியில் கடந்தாண்டு கர்நாடக வனத்துறை சபாரியை அறிமுகம் செய்தது. இதற்கு மக்களிடையே, வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுவரை 10,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் சபாரிக்கு வந்துள்ளனர். தமிழகத்தின் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தை ஒட்டியபடி, மலை மஹாதேஸ்வரா மலையின் வனப்பகுதி அமைந்துள்ளது. எனவே, தமிழக சுற்றுலா பயணியர் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். சத்தியமங்கலத்தில் சபாரிக்கு வாய்ப்பு இல்லை. எனவே அங்கிருந்து, மலை மஹாதேஸ்வரா மலைக்கு சபாரிக்கு வருகின்றனர்.
வனத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் அளித்த பேட்டி:
தமிழகத்தின் சத்தியமங்கலத்தில், ஹோம் ஸ்டேக்கள் உள்ளன. இங்கு இருந்து, கொள்ளேகால் மற்றும் திபெத்தியன் முகாம்களுக்கு வரும் சுற்றுலா பயணியர், எம்.எம்.ஹில்ஸ்க்கு வருகின்றனர்.
இங்கு மொத்தம் மூன்று சபாரி வாகனங்கள் உள்ளன. தினமும் நான்கு டிரிப்புகள் செல்கின்றன. வரும் நாட்களில் கர்நாடக வனத்துறை, உடுகெரே அணை அருகில் விருந்தினர் மாளிகை கட்ட திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

