ADDED : பிப் 16, 2025 10:19 PM

அழிந்து கொண்டிருந்த புட்டேனஹள்ளி புட்டகெரே ஏரியை, பறவைகள் வந்து தங்கி செல்லும் ஏரியாக மாற்றி உள்ளார், தமிழரான உஷா ராஜகோபாலன்.
மானாமதுரை
தமிழகம், மானாமதுரையில் பிறந்தவர் உஷா ராஜகோபாலன், 70. வளர்ந்தது கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில். எம்.ஏ., ஆங்கில இலக்கியம் முடித்துள்ள இவர், பல நிறுவனங்களில் உயர் பதவிகள் வகித்துள்ளார். அதுமட்டுமன்றி, இயற்கை ஆர்வலராகவும், எழுத்தாளராகவும் பல புத்தகங்கள், சிறுகதைகள் எழுதி உள்ளார். மொழி பெயர்ப்பாளராகவும் உள்ளார்.
பெங்களூரு புட்டேனஹள்ளியில் 2006ல் குடியேறிய இவர், தன் கண் முன் அழிந்து வரும் ஏரியை பார்த்து வேதனை அடைந்தார். தான் மட்டுமின்றி, தான் வசிக்கும் குடியிருப்புவாசிகள், சுற்றுப்புற மக்கள், பெங்களூரு மாநகராட்சியுடன் இணைந்து ஏரியை மீட்டெடுத்தார்.
இது குறித்து, உஷா ராஜகோபாலன் கூறியதாவது:
என் குடும்பத்தினர், பெங்களூரில் குடியேறியபோது, நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் புட்டேனஹள்ளி புட்டகெரே ஏரி இருந்தது. ஏரி என்று சொல்வதற்கு பதிலாக, குட்டை என்று சொல்லலாம். அந்தளவிற்கு சாக்கடை நீர், ஏரியில் கலந்திருந்தது. ஏரியை சுற்றிலும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. சிலர் சட்ட விரோதமாக ஆக்கிரமித்திருந்தனர்.
எனது தந்தை வனத்துறை அதிகாரி என்பதால், சிறு வயதிலேயே இயற்கையின் மகிமை குறித்து, எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார். ஆனால் இங்கு நான் கண்ட காட்சி, எனக்கு மனவேதனை அளித்தது. இதை சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிட்டேன்; எந்த பலனும் இல்லை.
எனவே, நான் குடியிருக்கும் பகுதி மக்களிடம் சென்று விளக்கினேன். எங்களுடன் மாநகராட்சியையும் இணைத்து கொண்டோம். இங்குள்ள மக்கள் பெருவாரியான ஆதரவு அளித்தனர். 2010 ஏப்ரலில் 'எர்த் டே' - எனும் உலக தினம் கொண்டாடினோம். அப்போது தான், பிரசன்னா நாதியா, ஆரத்தி மானே ஆகிய இருவரை சந்தித்தேன்.
அறக்கட்டளை
ஏரியின் வளர்ச்சியை கண்காணிக்கவும், அவ்வப்போது மாநகராட்சிக்கு தகவல் அனுப்பவும் என்னுடன் இணைந்தனர். ஏரி அழிவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, மாநகராட்சிக்கு உதவும் வகையில் 2010 ஜூனில் ராமசாமி என்பவருடன் இணைந்து, லாப நோக்கமற்ற வகையில், புட்டேனஹள்ளி சுற்றுப்புற ஏரி மேம்பாட்டு அறக்கட்டளையை பதிவு செய்தோம்.
மாநகராட்சியுடன் இணைந்து, ஏரியில் மரக்கன்று நடும் இயக்கத்தை நடத்தினோம். அப்போது இப்பகுதி மக்கள், மரக்கன்றுகள் நட்டு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கினர். மரக்கன்றுகளை பராமரிக்கவும், கண்காணிக்கவும் இருவரை பணியில் அமர்த்தினோம்.
ஏரியை பாதுகாக்கும் வகையில், 2011 மே மாதம் பெங்களூரு மாநகராட்சி, எங்களை ஏரியின் அதிகாரபூர்வ பாதுகாவலர்களாக்கியது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டோம்.
இந்த ஏரியில் ஆழமான, ஆழமற்ற பகுதிகள் உள்ளன. மழை காலங்களில் தேங்கும் நீர், வெயில் காலங்களில் ஆழமற்ற பகுதிகளில் வறண்டு காட்சி அளிக்கும். இதை தவிர்க்க, அருகில் உள்ள அவென்யூவில் இருந்து நீர்பரப்பை, ஏரிக்கு திசை திருப்ப மாநகராட்சியிடம் முறையிட்டோம். அவர்களும் ஒப்புக் கொண்டு செய்து கொடுத்தனர். அப்போது ஆண்டின் பல நாட்கள் ஏரி வறண்டே காட்சி அளித்தது. இதனால் வறண்ட பகுதியை விளையாட்டு மைதானமாக மாற்றிக் கொண்டனர்.
பறவைகள் வருகை
ஏரியை பாதுகாக்க, எங்கள் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தினோம். ஆழமான இடத்தில் நிறுவப்பட்ட ஏரேட்டர் செயற்கை நீரூற்றை இயக்க எங்களுக்கு உதவியாக இருந்தது. நீரில் ஆழம் அதிகரித்ததால், ஸ்பாட் பில்டு, பெலிகன்கள், இந்திய டார்ட்டர்கள் என பல பறவை இனங்கள் ஏரிக்கு வர துவங்கின.
தற்போது பறவைகளை படம் பிடிக்க, பல புகைப்பட கலைஞர்கள் இங்கு வருகின்றனர். அத்துடன், அவர்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களும் போட்டோ எடுக்கின்றனர்.
ஏரியை பாதுகாக்க அமைக்கப்பட்ட குழுவினர் திறமையானவர்கள். நான் இல்லை என்றாலும், ஏரியை பாதுகாக்கும் பணியில் தளராமல் தொடருவர். அதுபோன்று அவர்களும், தங்கள் பொறுப்பை அடுத்த தலைமுறையினருக்கு ஒப்படைப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

