டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் கடும் காட்டம்!
டாஸ்மாக் வழக்கு: அமலாக்கத்துறை மீது உச்சநீதிமன்றம் கடும் காட்டம்!
UPDATED : அக் 14, 2025 11:54 PM
ADDED : அக் 14, 2025 11:16 PM

தமிழகத்தின், 'டாஸ்மாக்' முறைகேடு தொடர்பான வழக்கில், 'சந்தேகம் இருந்தாலே சோதனை செய்வதா?' என, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், டாஸ்மாக்கில் சோதனை நடத்தியது குறித்தும் சரமாரியாக கேள்வி எழுப்பியது. தமிழக அரசு நடத்தும், டாஸ்மாக் மதுபான கடைகளில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது, பார் உரிமம் வழங்குவதில் முறைகேடு உள்ளிட்ட புகார்களில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த பல்வேறு வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
சோதனை
இதையடுத்து கடந்த மார்ச் மாதம், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டனர். அப்போது பெண் ஊழியர்களை இரவு வரை வீட்டிற்கு அனுப்பாமல் விசாரிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி முன்வைத்த வாதம்:
கடந்த மார்ச் மாதம் சென்னை, விழுப்புரம் உட்பட டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அப்போது, டாஸ்மாக் அலுவலகத்தில் இருந்த மின்னணு கருவிகள், 'லேப் - டாப்' ஆகியவற்றை எடுத்துச்சென்றனர். அமலாக்கத் துறையின் இந்நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் தனிப்பட்ட நபர் யாரேனும் தவறு செய்திருந்தால், அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம்.
அதை விடுத்து, அதன் தலைமை அலுவலகத்தில் எப்படி அத்துமீறி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்கள், கோப்புகள், லேப் - டாப்களை பறிமுதல் செய்ய முடியும்?
அடாவடி
இது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயல். வழக்கு பதிவு செய்தாலே எந்தவொரு அரசு நிறுவனத்திலும் அமலாக்கத் துறை நுழைந்து சோதனை நடத்த முடியுமா?
சி.பி.ஐ., கூட சோதனை நடத்தும் முன், அது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட அரசிடம் பகிர்ந்து கொள்கிறது. ஆனால், அமலாக்கத்துறை அடாவடித்தனமாக நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, ''டாஸ்மாக் மதுபான விற்பனையில் மிகப் பெரிய அளவுக்கு ஊழல் நடந்திருக்கிறது.
''தமிழக அரசு கூட இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறைக்கும் இந்த விவகாரத்தில் வலுவான சந்தேகம் இருக்கிறது,'' என, பதில் அளித்தார்.
அதிகார மீறல்
இந்த வாதத்தை ஏற்க மறுத்து நீதிபதிகள் கூறியதாவது:
உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டாலே, எந்தவொரு அரசு நிறுவனத்திலும் நுழைந்து சோதனை செய்வீர்களா? என்ன நினைத்துக் கொண்டுஇருக்கிறீர்கள்? இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என உங்களுக்கு தோன்றவில்லையா?
தமிழக அரசு தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அமலாக்கத் துறை திடீரென நுழைந்து விசாரிக்க என்ன காரணம்? மாநில அரசின் விசாரணை அதிகாரத்தை பறிக்க முயற்சிக்கலாமா?
இவ்வாறு நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
வழக்கு தகவல் அறிக்கை இல்லாமல் அமலாக்கத்துறையால் ஒரு வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியுமா? என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, அந்த வழக்கு முடிந்த பின் டாஸ்மாக் விவகாரத்தை விசாரிப்பதாக கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்ததால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்த தடை உத்தரவு தொடர்கிறது.
--- டில்லி சிறப்பு நிருபர் -