தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயம்: ஜூலை 1 முதல் அமல்
தட்கல் டிக்கெட்டுக்கு ஆதார் கட்டாயம்: ஜூலை 1 முதல் அமல்
UPDATED : ஜூன் 12, 2025 10:35 AM
ADDED : ஜூன் 11, 2025 05:23 PM

புதுடில்லி: 'ஆதார்' அடிப்படையில், 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை வரும் ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, 'தட்கல்' எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், பயண ஏஜன்ட்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது.
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், 'சர்வர்' முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். தட்கல் டிக்கெட் முன்பதிவில், ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமுள்ளது. அவர்களிடம் பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு, மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர். ஏராளமான போலி கணக்குகளை துவங்கி, தட்கல் டிக்கெட்டுகளை ஏஜன்ட்டுகள் வாங்குவதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி., முடக்கி உள்ளது.
முன்னுரிமை
இதை தடுக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஐ.ஆர்.சி.டி.சி., பயன்படுத்த துவங்கி உள்ளது. இதனால், நாளொன்றுக்கு புதிய கணக்குகள் துவங்கப்படுவது, 65,000லிருந்து, 12,000 ஆக குறைந்துள்ளது.
இந்நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவில், புதிய நடைமுறையை அமல்படுத்த ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆதார் எண் அடிப்படையில் தட்கல் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகமாகி உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ஆதார் எண்ணை பயனர் இணைக்க வேண்டும். தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், அந்த பயனருக்கு, மற்ற பயனர்களை காட்டிலும், 10 நிமிடங்கள் முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த நேரத்தில், ஏஜன்ட்டுகளால் கூட தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது.
இந்த புதிய நடைமுறை, ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக ரயில்வேத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது: வரும் 1 ம் தேதி முதல் தட்கல் திட்டம் மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் ஆதார் மூலம் உறுதி செய்யப்பட்ட நபர்களே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
அதேநேரத்தில் வரும் ஜூலை 15 முதல் கவுன்டர்களில் பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான ஓடிபி சரிபார்ப்பு மேற்கொள்ள வேண்டும். ரயில்வே கவுன்டர்களில் அல்லது ஏஜன்ட்டுகள் மூலமாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிப்பவரின் ஆதார் சரிபார்ப்பு அவசியம்.
பயணம் செய்பவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது இமெயில் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகே தட்கல் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
ரயில்வேயால் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் ஏஜன்ட்டுகளுக்கு தட்கல் முன்பதிவு நேரத்தில் 30 நிமிடங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணி முதல் முதல் 10: 30 மணி வரையிலும் ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு காலை 11:00 மணி முதல் 11: 30 மணி வரையிலும் ஏஜன்ட்டுகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. தட்கல் சேவை மக்களுக்கு முழுமையாக சென்று சேர இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.