ADDED : பிப் 16, 2024 07:18 AM
கோலார்: டி.சி.சி., வங்கி என்ற கோலார்- - சிக்கபல்லாப்பூர் மாவட்ட கூட்டுறவு வங்கி குடிபண்டே கிளையில் 1.50 கோடி ரூபாய்க்கு கணக்கு விபரம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அனைத்து கூட்டுறவு வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கோலார் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, சிக்கபல்லாப்பூர் மாவட்டம் உருவாக்கிய பிறகும், டி.சி.சி. எனும் மாவட்ட கூட்டுறவு வங்கி பிரிக்கப்படவில்லை. கோலாரில் ஒரே டி.சி.சி., வங்கியாக இயங்கி வருகிறது.
இந்த வங்கிக்கு இயக்குனர்கள், தலைவர் பதவிக்காலம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. இதுகுறித்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வங்கிக்கு நிர்வாக அதிகாரியாக, முகமது சலீம் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவர் பொறுப்பேற்றதும், வங்கியின் வரவு - செலவு கணக்கு விபரங்களை ஆய்வு செய்து வருகிறார். இதில், குடிபண்டே கிளையில் நடந்த ஆய்வில், 1.50 கோடி ரூபாய்க்கான கணக்கு விபரம் இல்லை. இதனால் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அனைத்து கிளைகளின் வங்கிக் கணக்கு விபரங்களை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
'இந்த பணிகள் முடிந்த பிறகே, நடவடிக்கை எடுக்கப்படும்' என, கூட்டுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துஉள்ளார்.