ADDED : பிப் 22, 2024 11:15 PM

ஜெயநகர்: லோக்சபா தேர்தலுக்கு தயாராவது தொடர்பாக, பா.ஜ., மூத்த தலைவர்களுடன், பெங்., தெற்கு தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு தெற்கு லோக்சபா தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக தேஜஸ்வி சூர்யா பதவி வகிக்கிறார். விரைவில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், மீண்டும் அவரே மீண்டும் போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகி உள்ளது.
தேர்தலுக்கு தயாராகும் வகையில், தேர்தல் நிர்வகிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு உறுப்பினர்களுடன், அவர் பெங்களூரு ஜெயநகரில் உள்ள தன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணப்பா, ராமமூர்த்தி, ரவி சுப்பிரமணியா, பெங்., தெற்கு பா.ஜ., தலைவர் உமேஷ் ஷெட்டி, முன்னாள் மேயர் நடராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
பூத் கமிட்டிகள் அமைப்பது; வாக்காளர்களின் வீடுகளுக்கு சாதனை புத்தகங்கள் வினியோகிப்பது; பிரசாரம் மேற்கொள்வது; சமூக வலைதளங்களை உபயோகிப்பது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
விரைவில் மீண்டும் ஒருமுறை ஆலோசித்து, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.