மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர கணவர்; தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்
மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த கொடூர கணவர்; தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்
ADDED : ஜன 23, 2025 12:39 PM

ஐதராபாத்: தெலுங்கானாவில் மனைவியை கொன்று உடல்பாகங்களை குக்கரில் வேக வைத்த கணவர் குரு மூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் புறநகரில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில், முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர் தனது 35 வயது மனைவி மாதவியை கொடூர முறையில் கொலை செய்துள்ளார். இதையடுத்து, அவர் தந்திரமாக தனது மனைவியை காணவில்லை என போலீஸ் கமிஷனர் இடம் புகார் அளித்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் குருமூர்த்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசார் அதிர்ச்சி அடையும் வகையில், திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். 'சண்டையின் போது மனைவி மாதவியை கொன்று விட்டேன். மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதனை குக்கரில் வேக வைத்து குளத்தில் வீசி விட்டேன்' என குருமூர்த்தி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீசார் கூறியதாவது: முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி 13 ஆண்டுகளுக்கு முன்பு மாதவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது மனைவியை கொடூர முறையில் கொலை செய்து விட்டு, குருமூர்த்தி தனது பெற்றோருடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அதனை குக்கரில் வேக வைத்து குளத்தில் வீசியதை குருமூர்த்தி ஒப்புக்கொண்டார். விரைவில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.