தெலுங்கானாவின் 'மர மனிதன்' காலமானார்; இயற்கை ஆர்வலர்கள் இரங்கல்
தெலுங்கானாவின் 'மர மனிதன்' காலமானார்; இயற்கை ஆர்வலர்கள் இரங்கல்
ADDED : ஏப் 12, 2025 01:26 PM

ஹைதராபாத்: தெலுங்கானாவின் மர மனிதன் என்று அழைக்கப்பட்டவரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான ராமையா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
கம்மம் மாவட்டம் ரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தாரிப்பள்ளி ராமையா. இவருக்கு மரங்கள் என்றால் உயிர். தாம் செல்லும் இடங்களில் எல்லாம் மரக்கன்றுகளை நடுவதில் ஆர்வமிக்கவர்.
எவ்வளவு தொலைவு சென்றாலும் மரக்கன்றுகளை நட்டுவிட்டுத்தான் செல்வார். அதனாலேயே இவர் மர மனிதன் என்று அழைக்கப்படுகிறார். இவரின் இந்த சீரிய நற்செயலுக்காகவே மத்திய அரசு ராமையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இந் நிலையில், ரெட்டிப்பள்ளியில் தமது வீட்டில் அவர் இருந்தபோது, மாரடைப்பால் உயிரிழந்தார். ராமையாவின் மறைவை அறிந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றும் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

