ராஜஸ்தான் அரச குடும்பத்தின் சொத்து பிரச்னையால் பதற்றம்
ராஜஸ்தான் அரச குடும்பத்தின் சொத்து பிரச்னையால் பதற்றம்
ADDED : நவ 27, 2024 01:41 AM

ஜெய்ப்பூர் :ராஜஸ்தானின் உதய்ப்பூர் அரண்மனைக்குள் உள்ள கோவிலுக்கு செல்ல, மேவார் அரச குடும்பத்தின் வாரிசுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், பிரச்னையை சுமுகமாக தீர்க்க மாவட்ட நிர்வாகம் தனி அதிகாரியை நியமித்துள்ளது.
ராஜஸ்தானின் உதய்ப்பூரில் உள்ள மேவார் அரச குடும்பத்தின் மன்னராக இருந்தவர் மகேந்திர சிங் மேவார். இவர் சமீபத்தில் காலமானார்.
இதை தொடர்ந்து, இவரது வாரிசான விஸ்வராஜ் சிங், புதிய மன்னராக நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டார்.
இவர், பா.ஜ., - எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி மஹிமா குமாரி ராஜ்சமந்த் தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக உள்ளார்.
புதிதாக பதவி ஏற்கும் மன்னர், உதய்ப்பூர் நகர அரண்மனை வளாகத்திற்குள் உள்ள அவர்களின் குடும்ப கோவில்களான துனி மாதா கோவில் மற்றும் ஏகலிங்க சிவன் கோவிலுக்கு சென்று வழிபடுவது அரச குடும்பத்தின் வழக்கம்.
அதன்படி, விஸ்வராஜ் சிங் தன் ஆதரவாளர்களுடன் உதய்ப்பூர் அரண்மனைக்கு நேற்று முன்தினம் சென்றார்.
அந்த அரண்மனையும், அதன் உள்ளே உள்ள கோவில்களும், விஸ்வராஜ் சிங்கின் தந்தை வழி உறவினரான அரவிந்த் சிங் மேவார் கட்டுப்பாட்டில் உள்ளன. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே சொத்து தகராறு உள்ளது. இதனால், விஸ்வராஜ் சிங்கை அரண்மனை வளாகத்திற்குள் நுழைய அரவிந்த் சிங் அனுமதி மறுத்தார்.
இதனால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் உருவானது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இருதரப்பும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் மூன்று போலீசார் காயம் அடைந்தனர்.
இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் குமார் போஸ்வால் சம்பவ இடத்துக்கு வந்து, இருதரப்புக்கும் சமரசம் செய்து வைக்க முயன்றார். ஆனால், அது பலன் அளிக்கவில்லை.
இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் சுமுக தீர்வு காண, 'ரிசீவர்' எனப்படும் தனி அதிகாரியை மாவட்ட நிர்வாகம் நியமித்து உள்ளது. கன்டா கார் போலீஸ் ஸ்டேஷனின் தலைமை அதிகாரி யோகேந்திர குமார் வியாஸ் ரிசீவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நோட்டீஸ், அரண்மனை வளாகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த பகுதி மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, அரண்மனை வாயிலில் பல மணி நேரம் காத்திருந்த விஸ்வராஜ் சிங், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு தன் ஆதரவாளர்களுடன் வீடு திரும்பினார்.