ADDED : மார் 05, 2026 02:39 AM

ரஜோரி, : ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை நம் ராணுவம் முறியடித்தது.
ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி பகுதியின் எல்லை கட்டுப்பாடு கோட்டை ஒட்டிய பிம்பர் காலி பகுதியில் நேற்று அதிகாலையில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர். அவர்கள் துர்கன்டி பகுதியில் இருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றதை அறிந்த நம் ராணுவ வீரர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதனால் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து ஜம்முவை சேர்ந்த ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் பிரிவினர் பதிலடி கொடுத்தனர். தரைவழி தாக்குதல் மூலம் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

