பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரில் பதுங்கல்
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தெற்கு காஷ்மீரில் பதுங்கல்
UPDATED : மே 01, 2025 07:30 PM
ADDED : மே 01, 2025 03:52 PM

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இன்னும் தெற்கு காஷ்மீரில் பதுங்கி உள்ளதாக தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பகுதியில் கடந்த ஏப்., 22ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த தாக்குதல் நடத்தியவர்கள் இன்னும் தெற்கு காஷ்மீரில் பதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல் அன்று, சம்பவ இடத்தில் இன்னும் சில பயங்கரவாதிகள் தொலைவில் இருந்தனர். பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்தால், அவர்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக அவர்கள் அங்கு இருந்தனர்.
அவர்கள் அனைவரும் வனப்பகுதியில் பதுங்கி உள்ளனர். நீண்ட நாட்கள் அங்கேயே மறைந்துஇருந்து செயல்படும் வகையில் உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டுவந்துள்ளனர். அவர்கள் அனைவரும் யாரையும் நம்பாமல் தனித்து செயல்படுகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.