32 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை விசாரணையில் அம்பலம்
32 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி: உளவுத்துறை விசாரணையில் அம்பலம்
UPDATED : நவ 13, 2025 08:06 PM
ADDED : நவ 13, 2025 04:28 PM

புதுடில்லி: புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் நபிக்கு தொடர்புடையதாக கருதப்படும் 3வது காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே, பயங்கரவாதிகள் 32 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதையும், அதற்காக கார்களில் மாற்றம் செய்துள்ளதையும் உளவுத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
டில்லி செங்கோட்டையில் கடந்த 10ம் தேதி பயங்கரவாதிகள் காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாக்குதலை பயங்கரவாத சம்பவமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. என்ஐஏ அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழு அமைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
செங்கோட்டையில் வெடித்து சிதறிய ' ஹிண்டாய்' நிறுவனத்தின் ' ஐ20' காரை ஓட்டிய புல்வாமவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபிக்கு சொந்தமான ' போர்டு ' நிறுவனத்தின் திவப்பு நிற ' ஈகோ ஸ்போர்ட்' காரை ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள கண்டாவாலி கிராமத்தில் போலீசார் நேற்று (நவ.,12) கண்டுபிடித்தனர். கார் நிறுத்தப்பட்டு இருந்த வீடு அல் பலாஹ் பல்கலையில் இருந்து 12 கி.மீ., தூரத்தில் உள்ளது. அந்த வீட்டின் உரிமையாளர் உமர்நபியின் நண்பர் என கூறப்படுகிறது. இந்த காரை போலி ஆவணங்கள் வாயிலாக வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இதனிடையே 'மாருதி' நிறுவனவத்துக்கு சொந்தமான 'பிரெஸ்ஸா' என்ற காரும் உமர் நபிக்கு சொந்தமானது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து அந்தக்காரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்தக் கார் அல் பலாஹ் பல்கலையில் இருப்பதை கண்டறிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே பல கார்களில் வெடிமருந்துகளை நிரப்பி அதன் மூலம் டிச., 6 ல் நாடு முழுவதும் பல இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்தனர் என உளவுத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 32 இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதற்காகவே, ஐ20 மற்றும் ஈகோ ஸ்போர்ட் உள்ளிட்ட கார்களை பயங்கரவாதிகள் மாற்றம் செய்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலை நடத்துவதற்கு எத்தனை கார்களை அவர்கள் மாற்றம் செய்துள்ளனர் எனவும் உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

