இறந்த பிறகும் சுட்டுத் துளைத்த பயங்கரவாதிகள்; கணவனை பறி கொடுத்த மனைவி கண்ணீர் பேட்டி
இறந்த பிறகும் சுட்டுத் துளைத்த பயங்கரவாதிகள்; கணவனை பறி கொடுத்த மனைவி கண்ணீர் பேட்டி
ADDED : ஏப் 25, 2025 07:19 AM

பெங்களூரு: ''என் மகன் அம்மா, சத்தம், நெருப்பு என்றான்'' என பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட மேற்குவங்க மாநில தொழில்நுட்ப வல்லுநரின் மனைவி பயங்கரவாதிகளின் அட்டூழியத்தை விளக்கினார்.
பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில், அமெரிக்காவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) நிறுவனத்தில் பணியாற்றிய 40 வயதான பொறியாளரான பிதன் அதிகாரி (Bitan Adhikari) ஒருவர். இவர் அவரது மனைவி சோஹினி மற்றும் குழந்தை கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். மனைவி, குழந்தை உயிர் பிழைத்தனர்.
பயங்கரவாதிகளின் அட்டூழியம் குறித்து, தொழில்நுட்ப வல்லுநரின் மனைவி சோஹினி கூறியதாவது: என் மகன் அம்மா சத்தம், நெருப்புன்னு சொன்னான். துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தில் தனது மகன் ஹிருதான் பயந்தான். எங்களுக்குப் புரியவில்லை. என் கணவர் பட்டாசு வெடித்திருக்கலாம் என்றார்.
அவர் என் கையைப் பிடித்துக்கொண்டு ஓடினார். நான் திரும்பிப் பார்த்தேன், ஒருவர் சுடப்படுவதைக் கண்டேன். பலர் கீழே விழுந்தனர். நாங்கள் தலை குனிந்தோம். பின்னர் எனது கணவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தாக்குதல் நடத்தியவர்கள் சுற்றுலாப் பயணிகளிடம் மதத்தை கேட்டனர். என் கணவர் உயிர் பிழைப்பார் என்று நான் நினைத்தேன். யாரும் உயிர் பிழைக்காமல் இருக்க அவர்கள் இறந்த உடல்களைக் கூட சுட்டார்கள். அந்த இடத்தில் போலீசாரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிதன், கடந்த மாதம் தனது மனைவி சோஹினி (37) மற்றும் மூன்று வயது மகன் ஹிருதானுடன் இந்தியா வந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

