'சிட்டி சலோ அபியான்' எப்போது?
'கிராம சலோ அபியான்' திட்டத்தை கோல்டு சிட்டி தொகுதியில் நடத்த போறதா 'மாஜி' தாமரைக்காரர் தலைமையில் ஆலோசனை கூட்டத்தை சிட்டியின் மையப் பகுதியான ரா.பேட்டை மன்னர் அரங்கத்தில் நடந்தினாங்க.
ஏற்கனவே, இவங்க, கிராமத்தில் தானே குடித்தனம் நடத்தி வராங்க. இவங்க 'சிட்டி சலோ அபியான்' நடத்தினால் தானே கேட்பதற்கும் பொருத்தமா இருக்கும்.
கோல்டு சிட்டி தொகுதியில் எப்போது 160 கிராமங்களை இணைச்சாங்களோ, அப்பவே எல்லாருமே கிராமத்து பக்கம் தானே சலோ அபியான் தினமும் நடத்துறாங்க.
இதை தானே தொகுதி பற்றி நல்லா தெரிஞ்சவங்க பேசி வராங்க.
சட்டம் யார் கையில்?
ரா.பேட்டை எம்.ஜி.மார்க்கெட் எதிரில் பிரிட்சர்ட் சாலையில் வாகனங்களை நிறுத்த கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படுமென சொன்னாங்க. அதற்காக அறிவிப்பு பேனர் வச்சாங்க.
வாகனங்களை புல் மார்க்கெட் பகுதியில் இலவசமாக நிறுத்த அம்பு குறி காட்டினாங்க.
அதனை, ஓரிரு நாளோடு மறந்துட்டாங்க.
புல் மார்க்கெட் பகுதியில் வாகனங்கள் நிறுத்தினால் அங்கு பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்னு அறிவிக்கல. இப்பவும் வழி நெடுகிலும் சிறுநீர் கழிப்பிடமாகவே இருக்குது.
ரா.பேட்டை பஸ் நிலையமோ, இலவச இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி இருப்பதை தடுக்க யாரும் முன் வந்த பாடில்லை.
கோல்டு நகரில் வீடு தோறும் வாகனங்கள் இருக்குது. ஆனால், ரா.பேட்டையில் வாகனம் நிறுத்துவதற்கென இடம் வசதி இல்லையே. இதுக்கு சட்டம் யார் கையில் இருக்குதோ.
அவர் வருவாரா?
கோலார் சோமயாஜுலுஹள்ளி கிராமத்தில், ஒரு கால்நடை மருத்துவமனை இருக்குது. இங்கு
12 ஆண்டா டாக்டரே கிடையாதாம். 10 கி.மீ. , சுற்றளவு தூரத்துக்கும் இது ஒன்றே தான் கால்நடைகளுக்கு மருத்துவமனை.
பசு வளர்ப்பு, பால் உற்பத்தி, ஆடு வளர்ப்பு கிராம தொழிலாக இருந்தும் கூட அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் யாரும் கண்டுக்கவே இல்லையாம்.
டாக்டர்கள் இல்லாததால் ஆடு, மாடுகளுக்கு இன்சூரன்ஸ் செய்ய கூட பெரும்பாடாக உள்ளதாம்.
டாக்டரே இல்லாமல், வெறும் கட்டடம் மட்டும் எதுக்கு என கிராமத்து ஜனங்க கேட்குறாங்க.
தேர்தல் நேரத்தில் மனிதர்கள் மீது மட்டுமல்ல. கால்நடைகள் மீதும் பாசம் பொழிறாங்க. ஆனால் தேர்தலுக்கு பிறகு மறந்திடுறாங்களேன்னு கிராம ஜனங்க சொல்றாங்க.
வரும் தேர்தலின் போது 'டாக்டரை தாருங்கள்; ஓட்டு தருகிறோம்' என சொல்லப் போறாங்களாம்.

